ஆயுர்வேத சிகிச்சை: திரை நட்சத்திரங்கள் உடலும் மனமும் புத்துணர்வு பெற கேரளாவில் என்ன செய்கிறார்கள்?

ஆயுர்வேத சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், தேஜா லேலே
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆயுர்வேதம், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது. இந்த பண்டைய மருத்துவ முறையின் மறுமலர்ச்சி மையமாக கேரளா உள்ளது.

கேரளாவிற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற ஷில்பா ஐயர், ஆயுர்வேத சிகிச்சைக்கு புகழ் பெற்ற ‘ஆர்ய வைத்யா சாலா’ அமைந்துள்ள கோட்டக்கல் நகரத்திற்குச் செல்ல முடிவு செய்தார். இந்த மையம் 1902ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஏழு நாட்கள் அங்கு தங்கி, உடல் மற்றும் மனதை தூய்மைப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சையான பஞ்சகர்மாவை முடித்த பிறகே அந்த சிகிச்சை மையத்தை விட்டு வெளியேறினார் .

“நான் தொடர்ந்து நவீன வாழ்க்கையின் தேவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தேன், தொடர்ச்சியான உடல் வலிகளும் இருந்தது. அதனால் தான் எனது சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தேன்” என்று ஷில்பா கூறுகிறார்.

பஞ்சகர்மா, நச்சு நீக்கும் செயல்முறைகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆயுர்வேத சிகிச்சை. இது மூலிகை மருந்துகள், உடல் சுத்திகரிப்பு சிகிச்சைகள், பிரத்யேகமான உணவுத் திட்டங்கள் மற்றும் ஆரோக்கிய செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நோய்க்கான மூல காரணத்தை நீக்கி, உடலை புத்துயிர் பெறச் செய்து, ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் உறுதி செய்கிறது.

முன்பை விட ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் உணர்வதாக ஷில்பா கூறுகிறார்.

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொள்வதற்காக பலரும் முன்பதிவு செய்கிறார்கள். கேரளாவின் இந்த கடற்கரை சொர்க்கத்தில் முழுமையான மருத்துவ சிகிச்சை என்பது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. கேரளாவில் உடலும் மனமும் புத்துணர்வு பெற ஆயுர்வேத சிகிச்சையில் என்ன செய்கிறார்கள்?

ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம், Amal Tamara

படக்குறிப்பு, கேரளாவில் பலரும் ஆயுர்வேத சிகிச்சைக்காக முன்பதிவு செய்கிறார்கள்.

3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முறை

‘ஆயுர்’ (வாழ்க்கை) மற்றும் ‘வேதம்’ (அறிவியல் அல்லது அறிவு) ஆகிய சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து பெறப்பட்ட ஆயுர்வேதம், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது.

உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் என்பது மனம், உடல், ஆன்மா மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையே ஒரு நுட்பமான சமநிலையைச் சார்ந்தது மற்றும் நோய் தீர்க்கும் உத்திகளுக்குப் பதிலாக தடுப்பு உத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

பழங்கால மருத்துவ முறையானது, பிரகிருதி (உடலின் அமைப்பு) மற்றும் தோஷங்கள் (உயிர் சக்திகள்) ஆகியவற்றுக்கு இடையேயான உலகளாவிய ஒற்றைத் தொடர்பை மையமாகக் கொண்டது. ஆகாஷ் (ஆகாயம்), ஜல் (நீர்), பிருத்வி (பூமி), அக்னி (நெருப்பு) மற்றும் வாயு (காற்று) ஆகிய ஐந்து கூறுகளின் மாறுபட்ட கலவைகள் மூன்று தோஷங்களை உருவாக்குகின்றன.

ஆயுர்வேத பயிற்சியாளரான டாக்டர் கௌரங் பனேரி, ஒவ்வொரு நபருக்கும் வாத, பித்த மற்றும் கபா ஆகிய மூன்று தோஷங்கள் வெவ்வேறு வலிமை மற்றும் அளவுகளில் உள்ளன என்பதை விளக்குகிறார்.

“முக்கியமான தோஷம் அவற்றின் பிரகிருதியை தீர்மானிக்கிறது. வெளிப்புற அல்லது உள் தூண்டுதலால் (பொதுவாக உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது) தோஷங்கள் பாதிக்கப்படும் போது நோய்கள் எழுகின்றன. மூன்றிற்கும் இடையே நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஆயுர்வேதம் செயல்படுகிறது,” என்று அவர் கூறுகிறார்.

ஆயுர்வேத மருத்துவம், பல தலைமுறைகளாக ஆயுர்வேத பயிற்சியாளர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேதத்திற்கு புகழ் பெற்ற மாநிலம் கேரளா தான். பல நூற்றாண்டுகளாக கேரள மக்கள் ஆயுர்வேத சிகிச்சை முறையின் மிகப்பெரிய விசுவாசிகளாக இருந்து வருகிறார்கள்.

ஆயுர்வேதத்தின் பிரபலத்தைப் பற்றி அறிந்த மாநில அரசு, 1994ஆம் ஆண்டு முதல் கேரளாவை ஆயுர்வேத ஆரோக்கியம் பெறுவதற்கான ஒரு இடமாக நிலைநிறுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

கேரளா சுற்றுலாத் துறை இயக்குநர் பி.பி.நூஹ் கூறுகையில், “ஆயுர்வேதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது கேரளாவில் மட்டுமே உள்ளது. இங்குள்ள பெரும்பாலான பயிற்சியாளர்கள் ஆயுர்வேத மருத்துவக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். இந்த அறிவு தலைமுறைதலைமுறையாக கடத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் உள்ள ஒவ்வொரு சிறிய நகரத்திலும் கிராமத்திலும் ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. இது மாநிலத்தில் அதன் பிரபலத்தை வெளிப்படுத்துகிறது.” என்றார்.

ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ஆண்டுகளுக்கு முன்னரே கேரளாவை ஒரு ஆரோக்கிய ஸ்தலமாக முன்னிறுத்த மாநில அரசு பல முயற்சிகளை எடுத்தது.

கேரளாவின் ‘ஆயுர்வேத பருவம்’

இந்தியாவில் வருடாந்திர பருவமழையைப் பெறும் முதல் இடம் கேரளாவாகும். கேரள மக்கள் இந்த மழைக்காலத்தை ‘ஆயுர்வேதப் பருவம்’ என்று அழைக்கின்றனர்.

“மக்கள் வருடாந்திர புத்துணர்ச்சி சிகிச்சைக்கு செல்லும் நேரம் இது. கேரளாவில் உள்ள யானைகளுக்கு கூட அவற்றின் வேலை அட்டவணையில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மருத்துவ உணவும் அளிக்கப்படுகிறது,” என்று நூஹ் கூறுகிறார்.

கேரளாவின் காலநிலை மற்றும் வளமான மண், பாரம்பரிய மருத்துவ தாவரங்கள் மற்றும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“கேரளாவின் அடர்ந்த வெப்பமண்டல காடுகளில் ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்பட்ட சாறுகள் மற்றும் அமுதங்கள் தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் உள்ளன,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தச் சிறிய மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு நடத்தும் ஆயுர்வேத மருத்துவமனைகள், 800 ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைகள் மற்றும் 800 ஆயுர்வேத மருந்தகங்கள் உள்ளன. 120 ஆயுர்வேத விடுதிகள் மற்றும் தனியார் ஆரோக்கிய மையங்கள் கட்டி வஸ்தி (Kati vasti) போன்ற சிறப்பு சிகிச்சைகளை வழங்குகின்றன.

இது முதுகு வலி மற்றும் வீக்கத்திற்கான எண்ணெய் அடிப்படையிலான சிகிச்சையாகும். இலக்கிழி , உடல் வலிகள் மற்றும் தசைக்கூட்டு காயத்தைச் சரிசெய்வதற்கு சூடான மூலிகைப் பொடிகள் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை. ஞாஞ்சவரா கிழி (Njavara kizhi) கீல்வாதம் அல்லது நாள்பட்ட தசைக்கூட்டு அசௌகரியத்திற்கான மசாஜ் சிகிச்சை.

ஷிரோதாரா, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதற்கான ஒரு மறுசீரமைப்பு சிகிச்சை. இது நெற்றியில் சூடான, மருத்துவ எண்ணெயை தடவுவதன் மூலம் செய்யப்படும் சிகிச்சை.

பெரும்பாலான சிகிச்சை மையங்கள் நோய் எதிர்ப்புச் சக்தி, மனநலம், பதட்டம், வலி ​​மேலாண்மை, எடை இழப்பு, தோல் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு, தூக்கப் பிரச்சனைகள், தடிப்புத் தோல் அழற்சி, கண் பராமரிப்பு, கீல்வாதம், பக்கவாதம், சியாட்டிகா, இரைப்பை பிரச்சனைகள் மற்றும் பலவிதமான உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சைகளை வழங்குகின்றன.

“சிகிச்சைகளில் பொதுவாக உணவு மாற்றங்கள், மூலிகை மருந்துகள், மசாஜ் சிகிச்சைகள், பவுல்டிசஸ், தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆகியவை அடங்கும். தாவரங்கள், மூலிகைகள், எண்ணெய்கள் மற்றும் சில மசாலாப் பொருட்கள் அறிகுறிகளை நிர்வகிக்கவும், உடல் மாற்றங்களுக்கு சிகிச்சையளிக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன” என்று ஆயுர்வேத மருத்துவர் ஷைனி ஹரிஷ் விளக்குகிறார். இவர் கேரள மாநிலம் கோட்டக்கல்லில் மருத்துவராக உள்ளார்.

ஆயுர்வேதம், நோய் தடுப்பு உத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் சமநிலையை கவனித்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்குவிக்கிறது. இயந்திரத்தனமான வாழ்க்கை மற்றும் அது கொண்டு வரும் பிரச்னைகளால் சோர்வடைந்த மக்களுக்கு இது பயன்படுகிறது.

கேரளாவில் உள்ள ஒரு சொகுசு ஆயுர்வேத ரிசார்ட்டான அமல் தமராவின் பொது மேலாளரும் மூத்த ஆயுர்வேத ஆலோசகருமான டாக்டர் ரெஜி ராஜ் கருத்துப்படி, “தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆயுர்வேதம் மீதான ஆர்வத்தைத் தூண்டியது கொரோனா தான். ஏனெனில் உடலை மீட்டெடுக்கவும் உடலின் சமநிலையைப் பராமரிக்கவும் அவ்வப்போது உடலைச் சுத்தம் செய்வதிலும் ஆயுர்வேதம் கவனம் செலுத்துகிறது” என்கிறார்.

ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடற்கரைகள் மற்றும் உப்பங்கழிகளுக்காக, ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது கேரளா.

‘ஆரோக்கியச் சுற்றுலா’

நவம்பர் 2021 முதல், ஆயுர்வேத சிகிச்சைகளுக்காக கேரளா மாநிலத்திற்கு வருகை தரும் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில் 15% அதிகரித்துள்ளது.

நீண்ட காலமாக கேரளாவில் அதன் கடற்கரைகள், மலைகள், உணவு வகைகளை விரும்பி சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆயுர்வேத மையங்களுக்கு ஆரோக்கிய சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தேவை மிகவும் அதிகமாக உள்ளது, ஆகஸ்ட் 2023இல், இந்திய அரசாங்கம் ஆயுஷ் விசாவை அறிமுகப்படுத்தியது. பாரம்பரிய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான பயணத்தை எளிதாக்கும் ஒரு புதிய வகை விசா அது.

(ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆறு பாரம்பரிய மருத்துவ முறைகளின் சுருக்கமாகும்.)

“கேரளாவில் செழித்தோங்கியுள்ள உள்நாட்டு மற்றும் முழுமையான சுகாதார அமைப்புகளை உள்ளடக்கியது ஆயுஷ். மக்கள் இன்னும் இந்த அமைப்புகளின் அடிப்படையில் மருத்துவத் தீர்வுகளைத் தேடுகின்றனர்,” என்று நூஹ் கூறுகிறார்.

இவற்றில், ஆயுர்வேதம் மிகவும் பிரபலமானது. மார்க்கெட் ரிசர்ச் ஃபியூச்சரின் 2024 அறிக்கையின்படி , உலகளாவிய ஆயுர்வேத சந்தை அளவு, 2022இல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2023இல் 9.2 பில்லியன் டாலர்களிலிருந்து 2032இல் 26.16 பில்லியன் டாலர்களாக உயர வாய்ப்புள்ளது.

ஆயுர்வேதத்தின் நன்மைகள் பற்றிய புரிதல், அலோபதியின் குறைகள் பற்றிய விழிப்புணர்வு, எளிதான அணுகல் மற்றும் மக்களின் செலவழிக்கும் திறன் அதிகரிப்பு ஆகியவை ஆயுர்வேதத்தின் தேவையை அதிகரிக்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கூடுதலாக, கேரளாவின் அமைதியான உப்பங்கழிகள் (Backwaters), சுத்தமான கடற்கரைகள் மற்றும் பசுமையான மலை வாசஸ்தலங்களுடன் சிகிச்சையை இணைப்பது பயணிகளை ஈர்க்கும் ஒரு அம்சமாகும்.

கேரளாவில் உள்ள நவீன மருத்துவ நிறுவனங்கள் இப்போது விமுறை காலத்தை ஆரோக்கியத்துடன் இணைக்கும் விதத்தில் சிறப்பு பேக்கேஜ்களை வழங்குகின்றன. இந்த ஆயுர்வேத ஸ்பாக்கள் மற்றும் ரிசார்ட்களில் பெரும்பாலானவை பிரமிக்க வைக்கும், அமைதியான தளங்களில் அமைந்துள்ளன.

ஷில்பாவின் பஞ்சகர்மா சிகிச்சைத் திட்டம் மூலிகை மருந்துகள், நச்சு நீக்க சிகிச்சைகள், ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட உணவுத் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது.

“செழிப்பான, பசுமையான, அமைதியான சுற்றுப்புறங்கள் எனது எதிர்பாராத ஆரோக்கிய பயணத்திற்கு ஒரு இனிமையான சூழலை உருவாக்கியது. உடல் சுத்திகரிப்பு முறையைத் தொடங்கும்போது நான் அற்புதமான மன அமைதியை அனுபவித்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

இதேபோல், புனேவைச் சேர்ந்த நீதா கேட்கர், தொடர்ச்சியான இருமலுக்கு சிகிச்சை பெற கேரளாவின் ஆலப்புழா நகரின் ஆயுர்வேத மையத்திற்குச் சென்றார். ஆரோக்கிய சிகிச்சை பெற்றதோடு மட்டுமல்லாது, படகு இல்ல பயணங்களுக்குப் பெயர் பெற்ற ஆலப்புழா நகரத்தின் அழகையும் ரசித்தார் நீதா.

ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயுர்வேதம், நோய் தீர்க்கும் உத்திகளுக்குப் பதிலாக தடுப்பு உத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

நீதாவைப் பொறுத்தவரை, ஆயுர்வேத முறை நோயின் அறிகுறிகளில் கவனம் செலுத்தாமல் நோய்க்கான காரணத்தை மையமாகக் கொண்டு இருப்பது தான் முக்கிய அம்சம்.

“நோயின் தன்மை மற்றும் கட்டமைப்பை ஒருவர் புரிந்து கொள்ளும்போது தான், உடலின் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த வேலை செய்ய முடியும் என்று மருத்துவர் கூறுகிறார். இந்த முறை தான் ஆயுர்வேதத்தை ஒரு சிறந்த மருந்தாக மாற்றுகிறது,” என்று நீதா கூறுகிறார்.

பாரம்பரிய மருத்துவ முறை இன்றைய உலகத்திற்கும் மக்களுக்கும் நன்றாக பொருந்துகிறது என ராஜ் ஒப்புக்கொள்கிறார்.

“மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலைக்கு பண்டைய அறிவியல் கொடுக்கும் முக்கியத்துவம், நோய் தடுப்பு சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வுடன் ஒத்துப்போகிறது. மனநலம், முறையற்ற தூக்கம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்னைகளை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது” என்று கூறுகிறார்.