பர்மிங்காம்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூன் 14) நடைபெறும் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் அணிக்கு, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கம்பீர் நெகிழ்ச்சி அடையும் வகையில் வாழ்த்துச் செய்தியை கூறி இருக்கிறார்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், இந்திய ஆடவர் அணியின் முக்கிய வீரர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகையில், "உலக அரங்கில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு பலருக்குக் கிடைப்பதில்லை. நீங்கள் நிச்சயம் 140 கோடி இந்தியர்களையும் பெருமைப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மூத்த வீரர் ரோஹித் சர்மா பேசுகையில், "இந்திய மகளிர் அணி கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட்டில் கோப்பைக்கு மிக அருகில் வந்து பலமுறை தவறவிட்டுள்ளனர். ஆனால், இம்முறை அவர்கள் கோப்பையை வெல்வார்கள் என நம்புகிறேன்" என்றார்.
கேப்டன் சுப்மன் கில், "இதற்கு முன்னதாக நீங்கள் சாதித்துக் காட்டியுள்ளீர்கள், இப்போதும் அதை மீண்டும் செய்வீர்கள்" என்று வாழ்த்தினார். டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "எதற்கும் அஞ்சாமல், ஆக்ரோஷமாக விளையாடி வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு விளையாடுங்கள்" எனக் கூறியுள்ளார்.
6 மாசம் கழித்து ஆட வந்த ரோஹித் சர்மா ஆனால்.. இப்படியா சொதப்புறது.. ‘ஹிட்மேன்’ மீது அழுத்தம்?
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி 13-3 என்ற கணக்கில் வலுவான வெற்றிக் கணக்கைக் கொண்டுள்ளதால், இந்தப் போட்டியில் இந்தியாவே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தற்போது டி20 உலகக் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோரின் ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.