தர்மசாலா: ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வரும் நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் களம் இறங்கினார். ஆனால், இந்த போட்டியில் 16 பந்துகளில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரது இந்த ஆட்டத்தால் மீண்டும் அணியில் அவரது இடம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. 2023 முதல் 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை 117.23 ஆக இருந்த அவரது ஸ்ட்ரைக் ரேட், அக்டோபர் 2025க்கு பிறகு 91.59 ஆக சரிந்துள்ளது. 39 வயதாகும் ரோஹித், தற்போது அணியில் தனது இடம் நிரந்தரமானதா என்பதில் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருப்பதாகத் தெரிகிறது. அவரது இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கொண்டு வர வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2026 தொடரில் காயம் காரணமாக 5 போட்டிகளைத் தவறவிட்ட ரோஹித், 2027 உலகக் கோப்பைக்காக தனது உடற்தகுதியை மேம்படுத்த உடல் எடையைக் குறைத்துள்ளார். தர்மசாலா ஒருநாள் போட்டியில் களம் கண்ட அவர், முதல் ஓவரிலேயே மணிக்கட்டில் அடிபட்டு ஷார்ட் பந்துகளில் திணறினார். 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது, சுப்மன் கில்லுடன் ஏற்பட்ட தவறான புரிதலால் ரன் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
இந்திய அணியில் கில், கோலி, கே எல் ராகுல் போன்ற பல ஆங்கர் பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது ரோஹித் சர்மா நிதானமாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட வேண்டும். அணியில் ரோஹித்தின் இடம் குறித்து தேவையான நம்பிக்கையை வழங்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் கில் தவறிவிட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது. தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் தான் ரோஹித் சர்மா முதலில் நிதானமாக ஆடுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
3 பந்துகளில் நழுவிய ஷாகித் அப்ரிடி சாதனை.. சதம் அடித்தும் ஆப்கன் வீரர் குர்பாஸ்-க்கு ஏமாற்றம்
இந்தப் போட்டி மழையால் தலா 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கன் தரப்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 102 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 195 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக 84 ரன்கள் குவித்து கை கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.