கல்கிஸ்சை, அத்திடிய வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (19) கல்கிஸ்சை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தச் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அத்திடிய வீதியிலுள்ள குறிப்பிட்ட கட்டிடத்தில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் ஒன்று இயங்குவதாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, கல்கிசை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் பிடியாணையின் அடிப்படையில் இந்த முற்றுகை நடத்தப்பட்டது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் நேரடிப் பங்களிப்புடன் இந்தச் கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கு சட்டவிரோதமாக தொலைக்காட்சி சமிக்ஞைகளை ஒளிபரப்பப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டன.
Beaches & Islands
சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித அனுமதியுமின்றி பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா பெறுமதியான தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், களுபோவில பகுதியில் தங்கியிருந்த 55 வயதுடைய மாலைத்தீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சட்டவிரோத ஒளிபரப்பின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் மற்றும் இதன் நோக்கம் என்ன என்பது குறித்துப் பொலிஸாரும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.