← முகப்பு செய்திகள்

ஆயுர்வேத மரபுகளைப் பாதுகாத்தல், மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்க யாழ்ப்பாணத்தில

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
ஆயுர்வேத மரபுகளைப் பாதுகாத்தல், மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்க யாழ்ப்பாணத்தில
ஆயுர்வேத மரபுகளைப் பாதுகாக்க யாழில் ஆயுர்வேத பாதுகாப்பு சபை

ஆயுர்வேத மரபுகளைப் பாதுகாத்தல், மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்க யாழ்ப்பாணத்தில் உள்ள 12 பிரதேச செயலகங்களிலும் தலா பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாண மேலதிக செயலர் கே. சிவகரன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மாவட்ட செயலர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச மற்றும் பாரம்பரியமாக வைத்தியம் செய்பவர்களாக பதிவு செய்யப்பட்ட 90 சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் கடமையாற்றுகின்றனர்.

ஆனால், நெடுந்தீவில் நிரந்தரமாக வைத்தியர் இல்லை. மருதங்கேணி மற்றும் காரைநகரில் தலா ஒருவரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் அதிகபட்சமாக அரச பாரம்பரிய வைத்தியர்களாக 27 வைத்தியர்களும் காணப்படுகின்றனர்.

சித்த ஆயுர்வேத வைத்திய முறைகள் மீதான உலகளாவிய நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் நாட்டுக்கு வருகை தரும் நிலை அதிகரித்துள்ளது.

சித்த ஆயுர்வேதம் நீண்டகாலத்தில் நோய்களை குணப்படுத்தும் என்றாலும், உள்ளார்ந்த ரீதியாக ஆர்வத்தோடு மக்கள் மருத்துவ சேவையினை நாடுகின்றனர். அதனால் 12 பிரதேச செயலகங்களில் பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மட்டத்தில் ஒரு பாதுகாப்புச் சபையை அமைப்பது மூலம் ஆயுள்வேத மரபுகளைப் பாதுகாத்தல், தரமான சிகிச்சை சேவைகளை ஊக்குவித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், போலியான மற்றும் தரமற்ற மருந்துகள் குறித்து கண்காணித்தல், மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற முக்கிய பணிகளை ஒருங்கிணைத்தல் குறித்து இதன்போது பேசப்பட்டது.

அத்துடன் இந்த சபை அரச உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு இடையே ஒரு பாலமாக ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவும் என மாவட்ட செயலர் தனது உரையில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, சபையில், மாவட்டச் சபையின் தலைவராக கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பா.பிரபாகரன் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, செயலாளராக வைத்தியர் இ. தில்லைவாசனும், பொருளாளராக வைத்தியர் இ.கஜனும், உப தலைவராக வைத்தியர் T.சபேசனும் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுடன் 12 நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net