மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 மார்ச் மாதத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், கேப்டன் பொறுப்பில் இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
சமீபகாலமாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அவரது பேட்டிங் திறன் மற்றும் இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும், இனி வரும் தொடர்களுக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. டி20 போட்டிகளில் சூர்யகுமார் விளையாடிய 4-வது பேட்டிங் வரிசையில், இனி ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்தத் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான திலக் வர்மா புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக இருந்த ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், இந்த முறை கேப்டன் பொறுப்புக்கு பரிசீலிக்கப்படவில்லை.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க ஆர்வம் காட்டினார். ஆனால், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் இதற்கு உடன்படவில்லை. சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினாலும், அவரது பேட்டிங்கில் உள்ள ஸ்திரத்தன்மையற்ற தன்மையைக் காரணம் காட்டி தேர்வுக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இறுதியில், ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாகவும், திலக் வர்மாவை துணை கேப்டனாகவும் நியமிக்க அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். பெங்களூரு அணியை ஐபிஎல் தொடரில் வழிநடத்திய ரஜத் படிதார் குறித்தும் எந்த விவாதமும் நடைபெறவில்லை.
IND vs AFG: ஆப்கானிஸ்தான் எதிரான டெஸ்டில் சிராஜ் பங்கேற்பது சந்தேகம்.. காஷ்மீர் வீரருக்கு வாய்ப்பு
தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், கடைசியாக 2023 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினார். ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை இவருக்கு உண்டு. 2024 இல் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த அவர், தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம், 5 அரைசதங்கள் உட்பட 498 ரன்கள் குவித்துள்ளார்.