மும்பை: 2026 ஐபிஎல் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ஆகியோர் பேசுவது போன்ற போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஹர்ஷா போக்ளே விளக்கம் அளித்துள்ளார்.
சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. அந்த வகையில், தற்போது பரவி வரும் வீடியோவில், விராட் கோலியைப் போல 'கிங்' ஆக விரும்புகிறீர்களா என்று ஹர்ஷா போக்ளே கேட்க, அதற்கு வைபவ் சூர்யவன்ஷி, கோலி மிகவும் மெதுவாக விளையாடுபவர் என்றும், சுயநலமானவர் என்றும் அவமரியாதையாகக் கூறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று தெளிவுபடுத்தியுள்ள ஹர்ஷா போக்ளே, தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "சமூக வலைதளங்களில் எனக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே நடந்ததாக ஒரு போலி டப்பிங் வீடியோ பரவி வருகிறது. அதில் வைபவ் மிகவும் திமிராகப் பேசுவது போல் காட்டப்பட்டுள்ளது. நான் அப்படி ஒரு கேள்வியைக் கேட்கவும் இல்லை, அவர் அவ்வாறு பதிலளிக்கவும் இல்லை. மிக மரியாதையுடன் பழகும் 15 வயது சிறுவனுக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள இந்தச் செயல் மிகவும் கொடூரமானது" என்று பதிவிட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2026 ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு, விராட் கோலியும் வைபவ் சூர்யவன்ஷியும் மிகவும் அன்போடு உரையாடிக் கொண்டனர். ஐபிஎல் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த உண்மையான வீடியோவில், கோலியை வைபவ் கைகூப்பி வணங்குவதும், அதற்கு கோலி அவரைப் பாராட்டுவதும் பதிவாகியிருந்தது.
இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் இவர்தான்.. சஞ்சு சாம்சனை முந்திய ஸ்ரேயாஸ்.. சூர்யகுமார் நீக்கம்
2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 776 ரன்கள் குவித்து தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார். இவரது ஆட்டத்தைப் பாராட்டிய விராட் கோலி, "இந்தச் சிறுவன் மிகவும் தனித்துவமானவர், அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிகிறது" என்று தனது முன்னாள் சக வீரரான ஏபி டிவில்லியர்ஸிடம் புகழ்ந்து பேசியிருந்தார். இருவருக்குள்ளும் இத்தகைய நல்ல நட்பு இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் இத்தகைய போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.