மும்பை: அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்காததற்கான உண்மையான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) விளக்கியுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய சுப்மன் கில், 732 ரன்கள் குவித்து அசத்தினார்.
குறிப்பாக, அவரது கேரியரில் இல்லாத அளவிற்கு 163-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாடினார். ஆனால், நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அவரது ஃபார்மோ அல்லது ஸ்ட்ரைக் ரேட்டோ இந்த நீக்கத்திற்குக் காரணம் அல்ல என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

அடுத்த 18 மாதங்களுக்கு இந்திய அணிக்கு மிக நெருக்கடியான போட்டி அட்டவணை உள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரு வீரர் தொடர்ந்து விளையாடினால் எளிதில் சோர்வடைந்து விடுவார் என்று தேர்வுக்குழுவினர் கருதுகின்றனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் தேவையாகும்.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக கில் இந்திய அணியை 9 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வழிநடத்த வேண்டும் மற்றும் சுமார் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும். அதோடு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட வேண்டியுள்ளது. இதனால், அவர் உடல் தகுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே டி20 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய டி20 அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி என வலுவான துவக்க வீரர்கள் வரிசையாக உள்ளனர். இதனால் மற்றொரு முன்வரிசை பேட்ஸ்மேனை அணியில் சேர்ப்பது கடினமாக உள்ளது. எனவே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு கில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ தெளிவாகக் கூறியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயரை விட இவருக்கு தான் கேப்டனாக நிறைய தகுதி இருக்கு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விவாதம்
தற்போது டி20 திட்டங்களில் கில் இடம் பெறவில்லை என்றாலும், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடர்களுக்கு முன்பாக அவர் மீண்டும் டி20 அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், 2027 உலகக் கோப்பையை வெல்வதே இந்திய அணியின் முக்கிய இலக்காக உள்ளது.