முல்லன்பூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக கேப்டனாக மிகச் சிறந்த பேட்டிங் சராசரியைக் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் 177 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், டெஸ்ட் கேப்டனாக தனது ரன் கணக்கை 1076 ஆக உயர்த்தியுள்ளார். இதில் அவரது பேட்டிங் சராசரி 82.8 ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1000 ரன்களுக்கு மேல் குவித்த கேப்டன்களில், ஆஸ்திரேலியாவின் மாபெரும் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக மிகச் சிறந்த சராசரியைக் கொண்ட இரண்டாவது கேப்டன் என்ற அரிய பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். டான் பிராட்மேன் கேப்டனாக 101.5 என்ற சராசரியில் 3147 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இந்தச் சாதனையில் கில்லுக்கு அடுத்த இடங்களில் குமார் சங்கக்காரா (1601 ரன்கள், 69.6 சராசரி), ஸ்டீவ் ஸ்மித் (4425 ரன்கள், 68.1 சராசரி) மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே (3665 ரன்கள், 59.1 சராசரி) ஆகியோர் உள்ளனர். மேலும், ஒரே ஆண்டில் 1000 டெஸ்ட் ரன்களைக் கடந்த முதல் இந்திய ஆண்கள் அணி கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையும் சுப்மன் கில் நேற்று படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பகுதியில், நேற்று 50 ரன்களுடன் களத்தில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
சூர்யகுமாருக்கு எதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை.. கேப்டன் பதவி பறிப்பு குறித்து ரோஹித் சர்மா உருக்கம்
ஆட்டத்தின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 110 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தற்போதைய ரன் ரேட் 4.32 ஆகும். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அறிமுக வீரர் மானவ் சுதார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.