சண்டிகர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 368 ரன்கள் குவித்து மிரட்டியுள்ள இந்திய அணி, இப்போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்திய அணி முதலில் தனது முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும்.

ஒருவேளை இவர்கள் ஆட்டமிழந்தாலும், அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் ஸ்கோரை 600 முதல் 650 ரன்கள் வரை கொண்டு செல்ல வேண்டும். இந்தியா இத்தகைய இமாலய ரன்களைக் குவித்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய ரன் அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்.
இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்குப் பந்துவீச்சு வியூகமும் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியா 600 ரன்களுக்கு மேல் எடுத்தால், ஆப்கானிஸ்தான் அணியை முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் அணி ஃபாலோ ஆன் பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆப்கானிஸ்தான் அணியை விரைவில் ஆல்-அவுட் செய்வதன் மூலம், இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்யாமலேயே இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்ய முடியும். சண்டிகரில் நிலவும் 40 டிகிரி வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக பிட்ச் மெதுவாக மாறும் என்பதால், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AFG: சுப்மன் கில், கே.எல்.ராகுல் அபார சதம்.. சாய் சுதர்சன், பண்ட் அரைசதம்.. மிரட்டிய இந்தியா
முதல் நாள் ஆட்டத்திலேயே கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து அசத்தியிருந்தனர். இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் அரைசதம் கடந்துள்ள ரிஷப் பண்ட் மற்றும் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களில் இருந்து மேலும் ஒன்று அல்லது இரண்டு சதங்கள் விளாசப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை வலுவாக அமைத்து இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நகர முடியும்.