லக்னோ: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் இன்று தனது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார்.
தர்மசாலாவில் நடைபெற்ற மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் களம் காண்கின்றன. 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காகப் பல்வேறு ஒருங்கிணைப்புகளை சோதித்துப் பார்க்கும் வாய்ப்பாக இத்தொடரைப் பயன்படுத்துவதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பிட்ச் குறித்து கருத்து தெரிவித்த தீப் தாஸ்குப்தா மற்றும் கிரேம் ஸ்வான், இந்த ஆடுகளம் கறுப்பு மற்றும் சிவப்பு மண் கலந்த கலவையாக இருப்பதாகக் குறிப்பிட்டனர். ஆட்டம் செல்லச் செல்ல பிட்ச் மெதுவாக மாறக்கூடும் என்பதால் முதலில் பேட்டிங் செய்வது நல்லது என்று ஸ்வான் கூறினார். ஆனால், மின்விளக்குகளின் கீழ் பேட்டிங் செய்ய பிட்ச் ஏதுவாக மாறும் என்பதால் முதலில் பந்துவீசுவது சரியான முடிவு என்று தீப் தாஸ்குப்தா தெரிவித்தார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தொப்பி வழங்கி அணியில் வரவேற்றார். ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பிரின்ஸ் யாதவ் அசத்தியிருந்தார். லக்னோ மைதானம் அவரது ஐபிஎல் உள்ளூர் மைதானம் என்பதால், அந்த அனுபவம் இன்றைய சர்வதேச அறிமுக போட்டியில் அவருக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று நிதிஷ் குமார் தனிப்பட்ட காரணத்திற்காக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக குல்தீப், ஜெய்ஸ்வால் என மொத்தம் 3 மாற்றம் அணியில் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பேட்டிங் வரிசை வலுவாகவும் அனுபவம் வாய்ந்ததாகவும் உள்ளது. கேஎல் ராகுல் நடுவரிசையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயம், மூத்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் சமீபத்திய ஒருநாள் போட்டிகளின் ஃபார்ம் சற்று கவலையளிப்பதாக உள்ளது. 2027 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டுள்ள அவர், தனது கடைசி 5 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவது இந்திய அணிக்கு முக்கியமானது.
ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த போட்டியைப் போல ரஹ்மானுல்லா குர்பாஸை மட்டுமே நம்பியிருக்காமல், மற்ற முன்னணி பேட்டர்களும் நிலைத்து நின்று விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான லக்னோ பிட்ச்சில் ரஷீத் கான் போன்ற வீரர்கள் இந்திய பேட்டிங் வரிசைக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
விராட் கோலி அடங்காதவர், திமிர் பிடித்தவர் தான்.. ஆனால்… ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து
இந்திய அணியில் சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்து வீச்சை வழிநடத்துகின்றனர். முதல் போட்டியில் அறிமுக வீரர்களாக களம் இறங்கிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் (3/27) மற்றும் ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபே (3/47) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில்லின் சிறப்பான வழிநடத்துதலில் இந்திய அணி இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்த முழு முனைப்புடன் களமிறங்குகிறது.