லக்னோ: அப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு, ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பேட்டிங் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.
தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, இர்ண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியதால், கீழ்-நடுவரிசை பேட்டிங்கை கே.எல். ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கவனித்துக் கொள்கின்றனர். ரோஹித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி இடது-வலது சேர்க்கைக்காக தொடக்க வீரர்களாக களம் இறக்கப்பட்டனர். இதனால் ஷுப்மன் கில் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் ஆறாவது முறையாக மூன்றாவது வரிசையில் களம் இறங்கினார்.

இந்த பேட்டிங் வரிசை மாற்றம் இந்திய அணிக்கு தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மாவை தொடக்க வீரர்களாக களம் இறக்கி, ஷுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளுவது எதிர்காலத்தில் தேவையற்ற தலைவலியை மட்டுமே உருவாக்கும்.
IND vs AFG: இந்திய அணியில் 3 மாற்றம்.. பிரின்ஸ் யாதவ் அறிமுகம்.. 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்
ஒருவேளை கில் இந்த புதிய வரிசையில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தால், அவர் மீண்டும் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டுமா இல்லையா என்ற குழப்பம் அவருக்குள் ஏற்படும். எனவே, அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. இதில் தெளிவு இல்லை என்றே நான் பார்க்கிறேன். இருப்பினும், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட தகுதியான ஜெய்ஸ்வால் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.
மேலும், இந்த பேட்டிங் வரிசை மாற்றங்கள் ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவை பாதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். "இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தால், வெளியில் இருந்து அவருக்கு பெரும் மன அழுத்தம் ஏற்படும்" என்றும் திவாரி மேலும் கூறினார்.
இதற்கு முன்பு, 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரின் போது விராட் கோலிக்கு ஏற்பட்ட கடைசி நேர காயம் காரணமாக ஷுப்மன் கில் 3வது வரிசையில் விளையாடினார். ஒருநாள் போட்டிகளில் 3வது வரிசையில் களம் இறங்கிய 5 போட்டிகளில் அவர் 53.20 சராசரியிலும், 102.70 ஸ்டிரைக் ரேட்டிலும் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 266 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் கிடைத்த வாய்ப்பை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், இரண்டாவது ஓவரில் ஷார்ட் மற்றும் வைடு பந்தை கட் செய்ய முயன்று பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
IND vs AFG: ஏமாற்றிய 24 வயது வீரர்.. இந்தியாவுக்கு ஆரம்பமே சோகம்.. மீட்பு பணியில் ரோகித், கில்
அவர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஷுப்மன் கில் 3வது வரிசையில் களம் இறங்கினார். களம் புகுந்த கில், நேர்த்தியான கவர் டிரைவ் மூலம் தனது ரன் கணக்கைத் தொடங்கினார். மூன்று ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்திருந்தது.