அமெரிக்காவில் இந்திய குழு இயக்கிய கப்பல் மோதி பாலம் இடிந்தது – பாலத்தில் சென்ற வாகனங்களின் கதி என்ன?

கப்பல் விபத்து

பட மூலாதாரம், EPA

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.

மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது.

300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர்.

போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றிவருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.

காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது

கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை

கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது

சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.

“சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை,” என்று அது கூறுகிறது.

கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.

அமெரிக்க கப்பல்

பட மூலாதாரம், Reuters

பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன?

இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன.

இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன – அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும்.

பாலம்

பட மூலாதாரம், EPA

மேரிலேண்ட் மாநிலத்தில் அவசரநிலை

பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலையை ஆளுநர் வெஸ் மூர் அறிவித்துள்ளார்.

“பைடன் நிர்வாகத்திலிருந்து மத்திய (Federal) சேவைகளை விரைவாகப் பெறுவம் வகையில் நாங்கள் ஒரு இடைநிலைக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.” என்று அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டோரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மார்ஸ்க்

பட மூலாதாரம், Getty Images

மார்க்ஸ் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல்

பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

“பால்டிமோரில் நடந்தது பற்றி நாங்கள் திகிலடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

கப்பலில் மார்ஸ்க் பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்பட்டது எப்படி?

பாலத்தில் மோதிய கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குழுமத்திற்கான தகவல்தொடர்புகளை கையாளும் அதிகாரியான பால் ஆடம்சன், “கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் 22 பேர் இருந்தனர்” எனத் தெரிவித்தார்.

கப்பல் குழுவைச் சேர்ந்த ஒருவரது தலையில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

மியாமி மற்றும் ஓக்லஹோமாவில் இருந்து, நிறுவனத்தின் அமெரிக்க குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பால்டிமோர் சென்று விசாரித்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டார்.

நீருக்குள் மூழ்கிய வாகனங்களின் கதி என்ன?

பால்டிமோர் தீயணைப்புத் தலைவர் கூறுகையில், “எங்கள் சோனார் கருவி தண்ணீரில் வாகனங்கள் மூழ்கி இருப்பதைக் கண்டறிந்துள்ளதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்”, ஆனால் எத்தனை வாகனங்கள் உள்ளன என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார்.

பணியாளர்கள் இன்னும் கப்பலில் இருப்பதாக அவர் கூறுகிறார். “நாங்கள் கடலோர காவல்படையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.

சில தொழிலாளர்கள் இன்னும் பாலத்தில் இருப்பதாக அவரது குழுவிடம் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)