பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தமிழ்நாட்டில் மாற்று அரசியலை முன்னெடுக்கும் வகையில் இன்று (ஜூன் 5) தனது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இன்று மதியம் 12 மணிக்குச் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தனது அரசியல் எதிர்காலம் மற்றும் புதிய திட்டம் குறித்துப் பொதுமக்களுடன் மனம் திறந்து உரையாடிய அவர், தங்களின் புதிய இயக்கத்தின் பெயரையும் அதன் பிரத்தியேக இணையதளத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
‘We The Leader’ (www.wetheleader.org) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய அரசியல் அமைப்பில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தன்னார்வலர்களாக (Volunteers) இணையுமாறு அண்ணாமலை பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். அண்ணாமலையின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஒட்டுமொத்த தமிழகத்திலும் அவரது புதிய இயக்கத்திற்குப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்கம் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே, சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட (1 Lakh+) புதிய தன்னார்வலர்கள் தங்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்து அண்ணாமலையின் புதிய பாதையில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த அசுர வேகப் பதிவு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய இயக்கத்திற்கு ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்துள்ள மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் தனிப்பட்ட ‘சிங்கம்’ பிம்பமும், இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்குமே இந்த அளவிற்குப் பதிவுகள் எகிறக் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு புதிய தலைமுறைக்கான அரசியல் களம் உருவாகியிருப்பதை இந்த அதிரடிப் பதிவுகள் உணர்த்துகின்றன. தற்போதைக்குத் தன்னார்வ இயக்கமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘We The Leader’ அமைப்பு, வரும் காலங்களில் அடிமட்ட அளவில் வலுவடைந்து, பின்னர் ஒரு முழுமையான பிராந்திய அரசியல் கட்சியாக (Regional Political Party) மாற்றப்படும் என்று அண்ணாமலை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.