அண்ணாமலை.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.. ரஜினிகாந்தின் ஆதரவாளர்… பாஜக மாநில முன்னாள் தலைவர்.. என பல்வேறு அடையாளங்களை கொண்டவர். திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் அண்ணாமலை. DMK files, செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு, திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, என டெல்லி கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்தவர் அண்ணாமலை. திமுக வெறுப்பை தவெக கையில் எடுப்பதற்கு முன்பே அதற்கான அடித்தளத்தை ஆழமாக போட்டவர் அண்ணாமலை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவகையில் திமுக ஆட்சி கவிழ அண்ணாமலையும் ஒரு மிக முக்கியக் காரணமே.
இவர் பாஜகவின் மாநிலத் தலைவராக நீடித்தால் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அதிமுக கூறிய நிலையில், அண்ணாமலையை மாற்றி நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைமையாக்கியது டெல்லி மேலிடம். அவரை மாநிலப் பொறுப்பில் இருந்து நீக்கியது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இதுவரை அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லையே என்ற அதிருப்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவது வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் அவருக்கு வழங்காமல் டெல்லி மேலிடம் ஏமாற்றிவிட்டது என்பதே அண்ணாமலை ஆதரவாளர்களின் குமுறலாக இருக்கிறது.
இந்த சூழலில் தான், பாஜக மேலிடம் தன்னைக் கண்டுக் கொள்வதில்லை என்பதாலும், தன்னுடைய ஆதரவாளர்களுக்காகவும் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கிவிட்டார் என்றும் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியுள்ளார். அவரது ராஜினாமா கடித்ததை பாஜக தலைமையும் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது யூடியுப் சேனலில் லைவில் வந்து பேசிய அண்ணாமலை, “கட்சிக்குள்(பாஜக) சில முரண்பாடுகள் இருந்தது. கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்துவிட்டது. இதுவரை தமிழ் மண்ணை விட்டுக் கொடுத்தது கிடையாது, தமிழக மக்களுடன் பயணம் செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அவர்களுடன் இருக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன், சிறந்த அரசியலை உருவாக்க முடியுமா என்று போராடிக் கொண்டே இருந்தேன்.
கட்சிக்குள் எனக்கிருந்த கருத்து வேறுபாடு ஏதோ ஒரு சில நாள்களுக்கு முன்பு ஏற்படவில்லை. என்னுடைய கருத்துகளை பொறுமையாக எடுத்துச் சொல்லி வந்தேன். கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதியே கட்சியிடம் சொல்லிவிட்டேன், பாஜகவிலிருந்து விலகப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் பயணத்திற்கு பின்னால் பாஜக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இதுவரை நாதக, தவெக, அதிமுக ஆகிய கட்சிகளை பாஜகவின் பி டீம் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், உண்மையான பாஜக பி டீம் அண்ணாமலை தொடங்கி உள்ள இந்த புதிய அரசியல் இயக்கம் தான் என்று கூறுகின்றனர். காரணம், பாஜக என்ற ஒரு அடையாளத்தில் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது.. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு என்பது இருப்பதால், பாஜகவில் இருந்துக் கொண்டு அதன் சித்தாந்தங்களை கொண்டு செல்ல முடியாது. எனவே, பாஜக என்ற அடையாளமே இல்லாத ஒரு தனிக் கட்சியை உருவாக்கி அதில் ஆட்களை சேர்த்து, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள், ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என அனைத்து தரப்பு நபர்களையும் இழுக்கும் ஒரு முயற்சியே அண்ணாமலையின் புதிய இயக்கம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். திமுக அதிமுக வாக்குகளை தவெக பிரித்து வைத்துள்ள நிலையில், இனி அக்கட்சிகள் எக்காரணம் கொண்டும் தலைநிமிரக் கூடாது என்றால், தவெகவிற்கு எதிரான ஒரு மாற்று எதிர்சக்தி தேவை. ஆனால் அது பாஜகவாக இருந்தால் மக்கள் ஏற்பது கடினம் என்பதால் அண்ணாமலையை வைத்து டெல்லி தலைமை காய் நகர்த்துவதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதற்கேற்றார் போல், அண்ணாமலையும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களையும், அல்லது பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யப்போவதாகவும் அறிவிக்கவில்லை என்பதால், நிச்சயம் இது பாஜகவின் பி டீம் என்று அரசியல் விமர்சகர்கள் திட்டவட்டமாகக் கூறிவருகின்றனர்.