லண்டன்: இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் பிட்ச் மோசமாக இருப்பதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே மொத்தம் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தது.
முதலில் பேட்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 40 ஓவர்களுக்குள் 140 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியும் ஆலி ராபின்சனின் அதிரடி பந்துவீச்சால் நிலைகுலைந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 61 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது. ராபின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்தை விட 79 ரன்கள் பின்தங்கியுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தின் சீரற்ற பவுன்ஸ் குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில், "முதல் நாளிலேயே 16 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது உண்மைதான். ஆனால் இது ஒரு நல்ல பிட்ச் கிடையாது. ஆட்டத்தின் முதல் நாளிலேயே பந்து மிகவும் தாழ்வாகச் சென்று பேட்ஸ்மேன்களின் பேடுகளில் படுவதைப் பார்க்க முடிந்தது. இது கவலைக்குரிய விஷயம்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "லார்ட்ஸ் மைதானத்தின் இந்த ஸ்கொயரில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை மெரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதே இந்த மைதானத்தில் பிட்ச் பிரச்சனை இருந்தது. அந்தப் போட்டி விறுவிறுப்பாக முடிந்ததால் யாரும் பிட்ச் குறித்துப் பேசவில்லை. ஆனால் இது டெஸ்ட் போட்டிக்கான சிறந்த பிட்ச் கிடையாது" என்று வாகன் சாடினார்.
IND vs AFG டெஸ்ட் போட்டியில் மெகா சாதனையை செய்யப் போகும் ரிஷப் பண்ட்.. இன்னும் எத்தனை 6 அடிக்கணும்?
காயத்தில் இருந்து மீண்டு 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நியூசிலாந்தின் கைல் ஜாமிசன் கூறுகையில், "பொதுவாக டெஸ்ட் போட்டியின் 3-வது நாளைத்தான் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கும் நாள் என்பார்கள். ஆனால் இப்போட்டியில் முதல் நாளே அவ்வாறு அமைந்துவிட்டது. இன்னும் 79 ரன்கள் பின்தங்கியுள்ள நாங்கள், பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.