தமிழ்நாட்டில் கட்டுமானத்துறை என்பது மந்த நிலையைச் சந்தித்து வரும் நிலையில், அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவற்றின் விலையானது யூனிட்டுக்கு தலா ரூ.500 வரை உயர்ந்துள்ளது.
அதாவது, ரூ 3300-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லியானது ரூ 500 உயர்ந்து ரூ 3800-க்கும், ரூ 4000 விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ 500 உயர்ந்து ரூ 4500-க்கும், ரூ.5000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் பி.சாண்ட் ரூ 500 உயர்ந்து ரூ 5500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றம் வீடு கட்டக் கனவு கண்டுக் கொண்டிருக்கு நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை பதம்பார்த்துவிடும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஜல்லி மற்றும் மணல் விலையேற்றம் மட்டுல்ல, இவற்றுடன் சேர்த்து இவற்றின் மூலப்பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் வீடு கட்டுவோரும், கட்டுமான நிறுவனங்களும் கவலையடைந்துள்ளனர்.
இப்படி ஜல்லி, மணல், அவற்றின் மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சிமெண்ட் உள்ளிட்ட இதர கட்டுமானப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு சாமானியரும் சுமந்துக் கொண்டிருக்கும் சொந்த வீடு கட்டும் கனவு தகர்ந்துப் போகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமானப் பொருட்கள் தங்கு தடையின்றிக் நியாயமான விலையில் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.