வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்கிறது. அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதால் உண்மை வெளிவராது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குரல் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இன்று இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்கிறது. அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதால் உண்மை வெளிவராது.
அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு தான் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. சகல நெருக்கடிகளுக்கும் நீதிமன்றம் ஊடாக நாங்கள் தீர்வு காண்போம்.
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், எமக்கும் இடையில் கடும் போட்டி நிலவும். சகல எதிர்க்கட்சிகளும் பொது நோக்கத்துடன் செயற்படுவது பாரியதொரு வெற்றியாகும் என்றார்.