லண்டன்: இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு, இந்தியாவில் வாழும் வாழ்க்கை பிடிக்கவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் கூறி இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியுடன் லியாம் லிவிங்ஸ்டோன் இணைந்து ஆடி இருந்தார். அந்த அனுபவம் குறித்து பேசுகையில் அவர் கோலிக்கு இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லை எனக் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வெறித்தனமான செல்வாக்கு காரணமாக, அவர்களால் எளிதாக வீதிக்கு வரவோ அல்லது வெளியே செல்லவோ முடிவதில்லை. குறிப்பாக, நாட்டின் மிகப்பிரபலமான விராட் கோலி இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார். இதன் காரணமாகவே விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இரண்டு குழந்தைகள் கடந்த 2024 பிப்ரவரி மாதம் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். இந்தியாவில் பல சொத்துக்கள் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலான நேரத்தை லண்டனிலேயே கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2025 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணியில் கோலியுடன் விளையாடிய இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன், கோலியின் குணம் குறித்து 'ஸ்டிக் டு கிரிக்கெட்' பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "மைதானத்திற்குள் நுழைந்தால் கோலி மிகவும் தீவிரமான ஒரு வீரர். அவருக்கு எதிராக யாராவது பேசினால், அவரும் பதிலடி கொடுப்பார். ஆனால், மைதானத்திற்கு வெளியே அவர் மிகவும் அமைதியானவர்; குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவார். இந்தியாவில் வாழும் வாழ்க்கை அவருக்கு உண்மையில் பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. எப்போதும் எல்லோர் பார்வையும் தன் மீது இருப்பதை அவர் விரும்பவில்லை. மைதானத்திற்கு வெளியே மிகவும் மென்மையான மனிதர்" என்றார்.
தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறியுள்ள லிவிங்ஸ்டோன், பெங்களூரு அணியின் பயிற்சியாளர்கள் ஆண்டி பிளவர் மற்றும் மோ போபட் ஆகியோர் கோலியின் பேட்டிங் முறையை எவ்வாறு மாற்றினர் என்பது குறித்தும் பேசினார்.
"அவர்கள் கோலியை பவர்பிளேயில் இன்னும் அதிரடியாக விளையாடவும், அதிக சிக்சர்களை அடிக்கவும் அறிவுறுத்தினர். தற்போது கோலி சுழற்பந்து வீச்சுக்கு எதிராகவும் முன்பை விட அதிக ஷாட்களை ஆடி, அதிரடியாக விளையாடி வருகிறார்" என்று லிவிங்ஸ்டோன் கூறினார்.
IND vs AFG டெஸ்ட் போட்டியில் மெகா சாதனையை செய்யப் போகும் ரிஷப் பண்ட்.. இன்னும் எத்தனை 6 அடிக்கணும்?
சமீபத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஐபிஎல் 2026 கோப்பையைக் கைப்பற்றியதும், அவரது மனைவி அனுஷ்கா சர்மா, கோலியுடன் கோப்பையை ஏந்தியபடி முத்தமிடும் அன்பான புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.