← முகப்பு செய்திகள்

Suryakumar Yadav Sacking Unfair After T20 World Cup Triumph: Former chief selector

🕐 05 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
Suryakumar Yadav Sacking Unfair After T20 World Cup Triumph: Former chief selector

மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவை நீக்குவது தற்போதைய சூழ்நிலையில் சரியான முடிவாக இருக்காது என்று முன்னாள் தலைமைத் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் எச்சரித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக்குழுவினர் ஜூன் 6 சனிக்கிழமை அன்று மும்பையில் கூடுகின்றனர். இதில் சூர்யகுமார் யாதவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதுபற்றி பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், "சூர்யகுமாரை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது தற்போதைய நிலையில் சரியானதாக இருக்காது. அவர் சமீபத்தில்தான் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாகவே விளையாடினார்."

"கடந்த 1 முதல் 1.5 ஆண்டுகளாக அவர் பேட்டிங்கில் சற்று சுமாராகச் செயல்பட்டாலும், அவருக்கு இன்னும் சில தொடர்களில் வாய்ப்பளிக்க வேண்டும். அவரது ஃபார்ம் தொடர்ந்து சுமாராக இருந்தால், அவரது துணை கேப்டனிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம்" என்றார்.

Suryakumar Yadav Sacking Unfair After T20 World Cup Triumph Ex-Selector MSK Prasad Warns BCCI

சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2026 தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 147.54 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2 அரைசதங்கள் உட்பட 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது செயல்பாடு சரிவில் இருந்தாலும், அவருக்கு உடனடியாக மாற்று வீரரைத் தேடாமல், ஒரு இளம் வீரரை அவரது துணை கேப்டனாக நியமித்து, அவரை எதிர்காலத் தலைவராக வளர்க்க வேண்டும் என்று பிரசாத் அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்கால கேப்டன்களாக ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், திலக் வர்மா, ரஜத் படிதார் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற பல வீரர்கள் வரிசையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே கொல்கத்தா அணியை சாம்பியனாக்கிய அனுபவம் கொண்டவர். அதேபோல், இஷான் கிஷன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரும் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டுள்ளனர் என்று பிரசாத் கூறியுள்ளார்.

இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்.. IRE, ENG தொடரில் வாய்ப்பு என தகவல்

மேலும், உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடிய முன்னணி வீரர்களுக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் ஓய்வளிக்க வேண்டும் என்று பிரசாத் பரிந்துரைத்துள்ளார். "வெயிலிலும், தொடர் போட்டிகளிலும் விளையாடி நமது வீரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக மிகவும் சோர்வடைந்துள்ளனர். எனவே அயர்லாந்து போன்ற தொடர்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மாற்று அணியை அனுப்பலாம். இதன் மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதுடன், எதிர்கால கேப்டனையும் அடையாளம் காண முடியும்" என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net