மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வழங்கியுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் கூடினர்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரேயாஸ் ஐயருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனால், அவர் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஸ்ரேயாஸ் ஐயரின் பெயரை முன்மொழிந்தனர். பிசிசிஐயின் உயர்மட்ட நிர்வாகிகள் அதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளனர்.

சமீபத்தில் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், கேப்டன் பதவியை இழப்பது மட்டுமின்றி, இந்திய அணியிலிருந்தும் நீக்கப்பட உள்ளார். கடந்த சில மாதங்களாக அவரது பேட்டிங் மிகவும் சுமாராக இருந்ததால், தேர்வுக்குழுவினர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். ஐபிஎல் 2026 தொடர் முடியும் வரை காத்திருந்த தேர்வுக்குழுவினர், தற்போது இந்த இறுதி முடிவை எடுத்துள்ளனர். இந்த முடிவு சூர்யகுமார் யாதவிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2023 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு இந்திய அணிக்காக எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அணியில் இடம் பெற்றிருந்தாலும், விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2024 இல் சாம்பியனாக்கியும், 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றும் தனது சிறந்த தலைமைப் பண்பை அவர் நிரூபித்துள்ளார்.
IND vs AFG: இது இந்திய டெஸ்ட் அணியா இல்லை குஜராத் டைட்டன்ஸ் அணியா? 6 பேருக்கு வாய்ப்பு தந்த கில்!
அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன்சி பயணத்தைத் தொடங்குகிறார். இந்திய அணி அயர்லாந்தில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலைக்குள் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.