கொழும்பு: இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில், சூப்பர் ஓவர் முடிவில் இந்திய ஏ அணி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் ஏற்பட்ட மோதல்களும், இந்திய அணியின் சில வியூக முடிவுகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, சூப்பர் ஓவரில் முதல் பந்தை எதிர்கொள்ள வராதது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
போட்டியின் இறுதிக்கட்டத்தில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் வீசிய ஓவரில் இந்திய அணி 19 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், மதுலன் 9 ரன்களுக்குள் இந்திய அணியை சுருட்டி இலங்கை அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஆட்டத்தின் முடிவில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை வீரர் ஒருவருக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூப்பர் ஓவரில் சூர்யான்ஷ் ஷெட்கே முதலில் ஸ்ட்ரைக்கில் நின்றார். அவர் முதல் மூன்று பந்துகளையும் சந்தித்து அதில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்தை எதிர்கொள்ளாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து வைபவ் முதல் பந்தில் இருந்தே நின்று இருந்தால் சூப்பர் ஓவரின் ஆறு பந்துகளையும் எதிர்கொண்டு அதில் மூன்று சிக்ஸர்களை அடித்து இருப்பார், இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் என ரசிகர்கள் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக, இலங்கை அணியின் சதீர சமரவிக்ரம 91 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற நிலையில், கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் சிறப்பாகப் பந்துவீசினார். இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அர்ஷத் கான் வெறும் 4 ரன்கள் மட்டுமே வழங்கி போட்டியை 'டை' செய்தார்.

போட்டி டையில் முடிந்ததும் முடிவை அறிவிப்பதில் குழப்பம் நீடித்தது. பின்னர் இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா நடுவர்களிடம் பேசி, சூப்பர் ஓவர் நடத்த வலியுறுத்தினார். நடுவர்களின் ஆலோசனைக்குப் பிறகு சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரை வீசிய அர்ஷத் கான் ஒரு வைடு மற்றும் நோ பால் உட்பட 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால், பதிலுக்கு விளையாடிய இந்திய அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி (14 பந்துகளில் 21) அதிரடியாகத் தொடங்கி ஆட்டமிழந்தார். திலக் வர்மா (23) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (32) ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த போதிலும், மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இந்த இக்கட்டான சூழ்நாட்டில் ஜோடி சேர்ந்த சூர்யான்ஷ் ஷெட்கே (66 பந்துகளில் 72) மற்றும் விப்ராஜ் நிகாம் (49 பந்துகளில் 51) ஆகியோர் சிறப்பான அரைசதங்களை விளாசி அணியை மீட்டனர். இவர்கள் இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் ஜோடி சேர்த்து இந்திய அணி 265 ரன்களை எட்ட உதவினர். ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.
IND A vs SL A: வைபவ் சூர்யவன்ஷி ஆவேசம்.. இலங்கை வீரரை தள்ளி மோதல்.. சூப்பர் ஓவரில் தோற்றபின் சர்ச்சை
இந்த தோல்வியானது ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இத்தொடரில் இந்திய ஏ அணி சந்திக்கும் இரண்டாவது தோல்வியாகும். இலங்கை ஏ அணி முந்தைய ஆட்டத்தின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.