தம்புள்ளா: இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஓவர் போட்டிக்கு பின், மைதானத்தில் 15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆக்ரோஷமாக இலங்கை வீரருடன் கையால் தள்ளி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த ஆட்டம் டையில் முடிந்த பிறகு, போதிய வெளிச்சமின்மை காரணமாக சூப்பர் ஓவர் நடத்துவதில் நடுவர்கள் தயக்கம் காட்டினர். அதற்கு முன் கடைசி பந்தில் எத்தனை ரன்கள் என்பதிலும் வாக்குவாதம் ஏற்பட்டு போட்டி டை ஆனதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அடுத்து வெளிச்சமின்மை பிரச்சனை வேறு எழுந்ததால் அதிருப்தி அடைந்த இந்திய கேப்டன் திலக் வர்மா மற்றும் பயிற்சியாளர்கள் மைதானத்தில் நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஒருவழியாக சூப்பர் ஓவர் நடத்த நடுவர்கள் ஒப்புக்கொண்டனர்.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை 'ஏ' அணி, அர்ஷத் கான் வீசிய சூப்பர் ஓவரில் அவிஷ்கா பெர்னாண்டோ அடித்த சிக்சர் உதவியுடன் 18 ரன்கள் குவித்தது. கடைசி பந்தில் பெர்னாண்டோ கேட்ச் ஆனதும் ஆட்டம் முடிந்தது என நினைத்து இந்திய வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். ஆனால், அது இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோ-பால் என மூன்றாவது நடுவர் அறிவித்தார். இதனால் திலக் வர்மா கடும் அதிருப்தி அடைந்தார். பின்னர் வீசப்பட்ட பிரீ-ஹிட்டில் 1 ரன் கிடைக்க, இந்தியாவுக்கு 19 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் இந்தியா சார்பில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே களம் கண்டனர். கடைசி 3 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது சூர்யவன்ஷி ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். குகதாஸ் மதுலன் வீசிய 4வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். 5வது பந்தில் பவுண்டரி அடித்த போதிலும், கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தை சூர்யவன்ஷி தவறவிடவே, இலங்கை அணி வென்றது.
IND A vs SL A: சூப்பர் ஓவருக்கு முன் வெடித்த சர்ச்சை.. இலங்கை ஏ அணியிடம் இந்தியா தோல்வி
ஆட்டம் முடிந்ததும் சூர்யான்ஷ் ஷெட்கே இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஓடிவந்த 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை வீரர் ஒருவரின் நெஞ்சில் பலமாகத் தள்ளி மோதலில் ஈடுபட்டார். உடனே இரு அணி வீரர்களும் ஓடிவந்து அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர். இந்த மோதல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.