← முகப்பு செய்திகள்

IND A vs SL A: The Tri-Series clash between India 'A' and

🕐 15 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
IND A vs SL A: The Tri-Series clash between India 'A' and

தம்புள்ளா: இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4வது லீக் ஆட்டம், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த திரில்லர் போட்டிகளில் ஒன்றாக மாறி, கடைசி பந்தில் டையில் முடிவடைந்தது. நடுவர்களின் சர்ச்சை முடிவுகள், கடைசி ஓவர் விக்கெட் என அனல் பறந்த இப்போட்டி இறுதியில் சூப்பர் ஓவருக்குச் சென்றது.

தம்புள்ளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை 'ஏ' அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய 'ஏ' அணிக்கு ஆரம்பத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. பிரப்சிம்ரன் சிங் 11 ரன்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 21 ரன்களிலும், கேப்டன் திலக் வர்மா 23 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

IND A vs SL A Thriller Ends in Tie After Last-Ball Run-Out and Umpiring Controversy

ஒரு கட்டத்தில் 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்த போது, சூர்யான்ஷ் ஷெட்ஜ் (72 ரன்கள், 66 பந்துகள்) மற்றும் விப்ராஜ் நிகாம் (51 ரன்கள், 49 பந்துகள்) ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டது. இறுதியில் இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனிடையே இந்திய வீரர் விப்ரஜ் நிகாம் பிட்ச்சில் நடந்ததாகக் கூறி அம்பயர்கள் இலங்கை அணிக்கு 10 ரன்கள் இலவசமாக வழங்கினர்.

பின்னர் 266 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 'ஏ' அணி துவங்கும் போதே 10 ரன்களுடன் தான் ஆடியது. பின்னர் தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 37 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தார். நடுகளத்தில் சதத்தை நோக்கி விளையாடிய சதீரா சமரவிக்ரம 93 ரன்கள் குவித்து இந்திய அணியை மிரட்டினார். சாமிகா குணசேகராவும் 18 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

கடைசி கட்டத்தில் ஆட்டம் அனல் பறந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் இலங்கை வெற்றி பெற 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பந்து வீச இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் தயாரானார்.

ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்களும், டை செய்ய 1 ரன்னும் தேவைப்பட்டது. அர்ஷத் கான் வீசிய லோ-புல்டாஸ் பந்து சாமிகா குணசேகராவின் பேடில் பட்டு விக்கெட் கீப்பருக்கு பின்னால் உருண்டது. அவர் ஷாட் அடிக்க எவ்வித முயற்சியும் செய்யாததால் பந்து பேடில் பட்டுச் சென்றது. விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் ஓடிச் சென்று பந்தைப் பிடிப்பதற்குள் பேட்ஸ்மேன்கள் 1 ரன் ஓடி முடித்தனர். இதனால் ஸ்கோர் சமனானது (டை). ஆனால், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் 2வது ரன்னுக்கு ஓடிய குணசேகராவை, பிரப்சிம்ரன் வீசிய த்ரோவை பிடித்து அர்ஷத் கான் ரன் அவுட் செய்தார்.

அதே நேரத்தில், பேட்ஸ்மேன் சாமிகா குணசேகரா பந்தை அடிக்க எந்த முயற்சியும் செய்யாததால், லெக் பைஸ் விதியின்படி முதல் ரன்னை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்திய கேப்டன் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் நடுவர்கள் கிறிஸ் காஃபனே, ரோஹன் பண்டிட் ஆகியோருடன் மைதானத்தில் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, நடுவர்கள் முதல் ரன்னை கணக்கில் எடுத்துக் கொண்டனர். இதனால் போட்டி 265 ரன்களுடன் டையில் முடிவடைந்தது. இதையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க மைதானத்தில் ஸ்டம்புகள் மீண்டும் நடப்பட்டு சூப்பர் ஓவர் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சூப்பர் ஓவரிலும் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அர்ஷத் கான் சூப்பர் ஓவரை வீசினார். ஒரு வைடு கொடுத்தார். மேலும், இலங்கை வீரர்கள் ஒரு பந்தை கூட வீணாக்காமல் ஒன்று, இரண்டு என ரன் குவித்ததோடு ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தனர். அடுத்து ஆறாவது பந்து ஃபுல் டாஸ் ஆக வீசப்பட்டது. அது கேட்ச் ஆனதால் அத்துடன் சூப்பர் ஓவர் முடிந்தது என இந்திய வீரர்கள் வெளியேற ஆரம்பித்த நிலையில், அந்த பந்து நோ பால் என அறிவித்து மீண்டும் கடைசி பந்தை வீசுமாறு சொன்னார் அம்பயர். இந்திய கேப்டன் திலக் வர்மா வாக்குவாதம் செய்த போதும் அது எடுபடவில்லை. பின்னர் இலங்கை அணி மொத்தமாக 18 ரன்கள் சேர்த்தது.

19 ரன்கள் என்ற இலக்கோடு சூப்பர் ஓவரில் இந்திய அணி பேட்டிங் செய்தது. சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சூப்பர் ஓவரை எதிர்கொண்டனர். ஆனால், இந்திய அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வைபவ் ஒரே ஒரு ஃபோர் அடித்ததே அந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி அடித்த பவுண்டரியாக இருந்தது. இதை அடுத்து இந்த நீண்ட போட்டியில் இலங்கை ஏ அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net