பாகல்பூர்: மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு காணாத வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான இளம் வீராங்கனை அக்சரா குப்தா, வெறும் 126 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 306 ரன்கள் குவித்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளார்.
பீகார் கிரிக்கெட் சங்கம் நடத்தும் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டம் இன்று (வியாழக்கிழமை, ஜூன் 18) பாகல்பூரில் உள்ள சாண்டிஸ் காம்பவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் களமிறங்கிய ரக்ஸால் பகுதியைச் சேர்ந்த அக்சரா குப்தா, எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

மைதானத்தில் 233 நிமிடங்கள் வரை நிலைத்து நின்று விளையாடிய அவர், 242.86 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 126 பந்துகளில் 306 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அக்சரா குப்தாவின் இந்த அசாத்திய இன்னிங்ஸில் 55 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பவுண்டரிகளாக விளாசிய அவர், வெறும் 16 பந்துகளில் தனது அரைசதத்தையும், 34 பந்துகளில் சதத்தையும் கடந்து மிரட்டினார். இவரது இந்த அபாரமான பேட்டிங் திறன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அக்சரா குப்தாவின் இந்த இமாலய சாதனையைப் பாராட்டிய பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹர்ஷ்வர்தன் மற்றும் செயலாளர் ஜியாவுல் அர்பின் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தின் கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து மாநிலத்திற்குப் பெருமை சேர்த்து வருவதாகவும், இந்த தொடக்க ஆட்டத்திலேயே இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது பீகார் கிரிக்கெட்டின் பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டுகிறது என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்பாக, இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் மும்பையைச் சேர்ந்த ஐரா குப்தா மாநில அளவிலான போட்டியில் 42 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் குவித்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. தற்போது அவருக்கு அடுத்தபடியாக அக்சரா குப்தா 306 ரன்கள் குவித்து மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஐபிஎல் 2027 எப்போது தொடங்கும்? பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்ட முக்கிய தகவல்!
கடந்த இரு ஆண்டுகளாக பீகாரில் இருந்து வந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தற்போது மகளிர் கிரிக்கெட்டிலும் அதே போல அக்சரா குப்தா அதிரடியாக 300 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார். இதை அடுத்து பீகார் கிரிக்கெட் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.