நியூயார்க்: 2026 ஃபீஃபா உலகக் கோப்பை தொடரில் DR காங்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 1-1 என சமன் செய்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை பிரபல கால்பந்து விமர்சகர் டேனியல் ரியோலோ கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தத் தொடரின் தங்களது முதல் போட்டியில் ஆப்பிரிக்க அணியான காங்கோவுக்கு எதிராக ராபர்டோ மார்டினெஸின் போர்ச்சுகல் அணி டிராவை பெற்றது.
ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் மிட்ஃபீல்டர் ஜோவா நெவெஸ் கோல் அடித்து போர்ச்சுகல் அணிக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை தந்தார். இருப்பினும், இதற்குக் கடுமையான பதிலடி கொடுத்த காங்கோ அணி, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (stoppage time) 5-வது நிமிடத்தில் நியூகேஸில் யுனைடெட் அணியின் ஸ்டிரைக்கர் யோவான் விஸா மூலம் ஆட்டத்தைச் சமன் செய்தது.

இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் ஃபார்வர்டு ஆட்டத்தில் ரொனால்டோ பெரும்பாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தனித்து விடப்பட்டார். ஆட்டம் முடிந்த பின்னர் 41 வயதான ரொனால்டோவை கடுமையாகச் சாடிய விமர்சகர் டேனியல் ரியோலோ, போர்ச்சுகல் அணி மைதானத்தில் 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடியது போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறினார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 அதிவேக சதம் விளாசிய இந்திய அணி கேப்டன்கள் பட்டியல்
எக்ஸ் (X) தளத்தில் அவர் கூறுகையில், "கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணிக்குப் பெரும் தொல்லையாக மாறிவிட்டார். அவர்கள் மைதானத்தில் 10 வீரர்களுடனும், முன்னால் ஒரு கம்பத்தை வைத்தும் விளையாடுவது போல் இருந்தது. மெஸ்ஸிக்கு தனது கேரியரின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம் என்பது தெரியும்.
ஆனால் ரொனால்டோ தனது சொந்த உலகத்தில் இருக்கிறார். தனக்கு இன்னும் 25 வயது தான் ஆகிறது என்றும், தான் இன்னும் ஒரு பெரிய கிளப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் நினைக்கிறார்" என்று பேசியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெறும் 25 முறை மட்டுமே பந்தைத் தொட்டார், அதில் ஐந்து முறை மட்டுமே எதிரணியின் பாக்ஸிற்குள் இருந்தது. அவர் மூன்று முறை கோல் அடிக்க முயன்றார், ஆனால் அதில் ஒன்று கூட இலக்கை நோக்கிச் செல்லவில்லை. உலகக் கோப்பையின் தங்களது முதல் குரூப் சுற்று ஆட்டத்தில் டிரா செய்தது போர்ச்சுகல் அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக கொலம்பியா 3-1 என்ற கணக்கில் வென்றதால், தென் அமெரிக்க அணியான கொலம்பியா குரூப் 'K' பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதே நேரத்தில், 41 ஆண்டுகள் மற்றும் 132 நாட்களில் ஃபீஃபா உலகக் கோப்பையில் விளையாடிய மிக வயதான அவுட்ஃபீல்ட் வீரர் என்ற வரலாற்றை ரொனால்டோ படைத்துள்ளார். மேலும், அதிக உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவருமே தங்களது நாடுகளுக்காக 6 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று விளையாடியுள்ளனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் ரியல் மாட்ரிட் அணி வீரரான டோனி குரூஸ், ரொனால்டோ தனது தகுதியின் அடிப்படையிலேயே இன்னும் போர்ச்சுகல் அணியின் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுகிறார் என்று கூறியுள்ளார். ஐந்து முறை பாலன் டி'ஓர் (Ballon d'Or) விருதை வென்ற ரொனால்டோ தான், பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸிடம் இருக்கும் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 'கிறிஸ்டியானோ ரொனால்டோ' என்ற பெயருக்காக மட்டும் அவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடவில்லை என்று மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் யுவென்டஸ் அணியின் முன்னாள் நட்சத்திரத்தை குரூஸ் ஆதரித்துள்ளார்.2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற டோனி குரூஸ், 'Madrid Xtra' செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில், "ரொனால்டோவின் பெயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பதற்காக மட்டும் அவர் களமிறங்குவதில்லை.
IND vs AFG: இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்தேன்.. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்
மாறாக அந்த ஏரியாவில் அவரே இன்னும் அவர்களின் மிகச் சிறந்த அட்டாக்கராக விளங்குகிறார்" என்று கூறினார். ரொனால்டோ மற்றும் குரூஸ் இருவரும் ரியல் மாட்ரிட் அணியில் நான்கு சீசன்கள் ஒன்றாக விளையாடி பல கோப்பைகளை வென்றுள்ளனர். அவர்கள் 'லாஸ் பிளாங்கோஸ்' அணிக்காக 171 போட்டிகளில் இணைந்து விளையாடி, 16 கோல் பங்களிப்புகளைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.