ஆண்டலியா: துருக்கியின் ஆண்டலியா நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 தொடரில், ஒலிம்பிக் சாம்பியனான தென்கொரியாவை வீழ்த்தி இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா – கும்கும் மொஹோத் ஜோடி ரிகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14) நடைபெற்ற ரிகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவின் பரபரப்பான இறுதிப்போட்டியில், இந்தியாவின் தீரஜ் மற்றும் 17 வயது இளம் வீராங்கனை கும்கும் மொஹோத் இணை, தென்கொரியாவின் வலிமைமிக்க ஜோடியான கிம் ஜே தியோக் – ஓ யேஜின் இணையை எதிர்கொண்டது. ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான பலம் வாய்ந்த கொரிய இணையை தங்களது துல்லியமான குறி இலக்குகள் மூலம் வீழ்த்தி இந்திய ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது.

முன்னதாக நடைபெற்ற நாக் அவுட் போட்டிகளில் டென்மார்க் அணியை 6-0 என்ற கணக்கிலும், அமெரிக்காவை 6-2 என்ற கணக்கிலும் மற்றும் ஜெர்மனியை 6-2 என்ற கணக்கிலும் வீழ்த்தி இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை வில்வித்தையில் ரிகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அன்று ஆண்டலியா நகரில் நடந்த போட்டியில் ரிதி மற்றும் தருண்தீப் ராய் ஜோடி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகத் தரவரிசையில் 16வது இடத்தில் உள்ள ராணுவ வீரரான தீரஜ், இதற்கு முன்னதாக உலகக் கோப்பை கலப்பு பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தாலும், தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். தனது அறிமுக சீசனிலேயே விளையாடும் 17 வயது கும்கும் மொஹோத், கடந்த மாதம் ஷாங்காய் உலகக் கோப்பையிலும் இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.
24 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை ஆடவந்த துருக்கியை 2 கோல் அடித்து அனுப்பிய ஆஸ்திரேலியா
கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தீரஜ், இன்று நடைபெறும் ஆடவர் தனிநபர் அரையிறுதிப் போட்டியிலும் ஜெர்மனியின் மோரிட்ஸ் வைசரை எதிர்கொள்ள உள்ளார். இதில் வென்றால் அவர் தனது முதல் உலகக் கோப்பை தனிநபர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஒரே தொடரில் இரட்டைப் பதக்கம் வெல்லும் வரலாற்று வாய்ப்பைப் பெறுவார்.