← முகப்பு செய்திகள்

விக்கிரமாரச்சி பல்கலைக்கழக நெருக்கடி: பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சஜித்

🕐 03 May 2026 📂 செய்திகள் 176 பார்வைகள்
விக்கிரமாரச்சி பல்கலைக்கழக நெருக்கடி: பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சஜித்

கம்பஹா விக்கிரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பீடம் மற்றும் முகாமைத்துவப் பீடங்களில் நிலவும் பாரிய நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

விக்கிரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து, தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைச் சஜித் பிரேமதாசவிடம் முன்வைத்தனர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் பாடநெறிகள் நடத்தப்படும் விதம், மனித மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல குறைபாடுகள் நிலவுகின்றன. சுமார் 13 மாதங்கள் கடந்தும் உயர்கல்வி அமைச்சிடம் இதற்கான முறையான தீர்வுகள் இல்லை என மாணவர்கள் சுட்டிக்காட்டினர். இதனால் மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களின் கல்வியின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்

இப்பிரச்சினையை ஆராயக் குழுக்களை அமைப்பதில் நேரத்தைக் கடத்தாமல், மாணவர்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தீர்வுகளை எட்டும் போது மாணவர் சங்கங்களுடன் ஒருங்கிணைந்து, அவர்களின் கருத்துகளையும் உள்வாங்க வேண்டும்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

முறையான மற்றும் யதார்த்தமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்குப் பிரதமர் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும்.

மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான தீர்வுகளை அரசாங்கம் இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net