← முகப்பு செய்திகள்

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு ; ஜூன் 17 முதல் சாட்சி விசாரணை

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 72 பார்வைகள்
முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு ; ஜூன் 17 முதல் சாட்சி விசாரணை

88 இலட்சம் ரூபா நிதிமோசடி தொடர்பில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை (06) உத்தரவிட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றைய தினம் வழக்கின் முற்பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பிக்க நீதிபதி தீர்மானித்தார்.

அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வழக்கின் பிரதிவாதி உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் அழைப்பாணை விடுக்கவும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்வனவு மற்றும் இறக்குமதிப் பிரிவின் முகாமையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் படி, 2016 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் தார் இடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்வனவு நடைமுறையின் போது, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு முறையற்ற வகையில் வரப்பிரசாதங்களை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும், அதன் ஊடாக அவர் ஊழல் எனும் குற்றத்தைச் செய்துள்ளதாக குறிப்பிட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net