தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்திவிட்டது. விசிக மற்றும் இடதுசாரிகளிடம் அக்கட்சி ஆதரவு கேட்டுள்ளது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் திடீரென புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.

ஆனால், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக வெளியான செய்தி தவறானது என, அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தவெகவுக்கு ஆதரவளிப்பது போன்ற செய்திகளும் கருத்துகளும் வந்துகொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.
இந்த சூழலில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டாக புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு

முன்னதாக, தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை புதன்கிழமை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
விஜய் உடன் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், செங்கோட்டையன், என்.ஆனந்த், அருண் ராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உடன் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
இந்த நிலையில், 16வது சட்டப்பேரவை மே 5-ஆம் தேதி முதல் கலைக்கப்படுவதாக நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

பட மூலாதாரம், mkstalin/X
இந்நிலையில், நேற்று இரவு அதிமுக-திமுக கூட்டணி குறித்த ஊகங்கள் தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் பெரியளவில் பேசுபொருளாக மாறியது.
எனினும், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி தன் எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸின் துரோகத்தையும் (ஒருவேளை மற்ற கூட்டணிக் கட்சிகளின் துரோகத்தையும்) மீறி, திமுக ஒரு திறமையான எதிர்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதை நிறுத்துமாறு பாஜகவை அதிமுக வற்புறுத்துகிறது. இது மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு காபந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பொறுத்திருந்து பார்ப்போம்" என தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை என்றும், "பள்ளி குழந்தைகளுக்கு இலவச காலை உணவுத் திட்டம் மற்றும் பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை போன்ற புதிய திட்டங்களை புதிய அரசு தொடர வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விசிக, இந்திய கம்யூ. கூறியது என்ன?
இந்தச் சூழலில் தவெக-விடம் இருந்து ஆதரவு கோரி கடிதம் வந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், முற்போக்கு அரசை அமைக்க விரும்புகிறோம், அதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"நாங்கள் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டோம்" என்றும் அவர் கூறினார்.
செயற்குழுவில் ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் என வீரபாண்டியன் தெரிவித்தார்.
இதேபோல் விசிகவும் இன்று ஆலோசித்து தனது முடிவை அறிவிக்கும் என்று அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு