முல்லைத்தீவு நந்திக்கடல் களப்புப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக இன்று காலை இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, ஒரு படகு எரியூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை (02) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லீம் சமூகத்தினரும், கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினரும் இடையே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கடுமையான மோதலாக மாறியுள்ளது.
அதில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தாக்குதலுக்கு இலக்கான மீனவரின் படகு ஒன்று எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 49 வயதுடைய இரு நபர்கள் கடுமையாக காயமடைந்ததுடன், நீராவிப்பிட்டியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.