இராஜகிரிய, மெத வெலிகடை வீதிப் பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி, சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்த சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட நிதி மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டு வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மெத வெலிகடை வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பல தளங்களை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர்கள் சீனா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேகம் நபர்களிடமிருந்து பெருமளவிலான கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் இணையதளம் வாயிலான நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த சிலர் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களின் விசா காலாவதி தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.