தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பன்னிரண்டாவது தேசிய மாநாடு வவுனியா மாவட்டத்தில் உள்ள வோர்ஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (14) மாலை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் எட்டு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்ட பொதுக்குழு உறுப்பினர்களினால் மத்திய குழு உறுப்பினர்கள், தலைமை குழு உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகளின் தேர்வு இடம்பெற்றது.
இத்தேர்வுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் உப தலைவராக குருசுவாமி சுரேந்திரன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் நிதிச் செயலாளராக கமலவிஜிந்தன், தேசிய அமைப்பாளராக செந்தில்நாதன் மயூரன், நிர்வாகச் செயலாளராக பரமலிங்கம் நித்தியானந்தன், இளைஞர் அணிச் செயலாளராக தியாகராஜா பிரபாகரன் ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
இம்மாநாட்டில் செயலாளர் அறிக்கை, நிதிச்செயலாளர் அறிக்கை மற்றும் தலைவர் உரையுடன் உப தலைவரால் கட்சியின் மாநாட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது.