குறிப்பிட்டதொரு பணப் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பத் தவறு மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட நிதியிழப்பு குறித்து மக்கள் வங்கி உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய தொகைக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தவறு தற்போது முழுமையாகக் கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டு விட்டதாக மக்கள் வங்கி பொதுமக்களுக்கு அறியத் தந்துள்ளது.
இது குறித்து மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தத் தவறு கண்டறியப்பட்ட உடனேயே முழுமையான உள்ளக மீளாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, செயற்பாட்டுக் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரத் தரப்புக்களின் ஆலோசனையின் கீழ் இவ்விடயம் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது.
இவ்விடயத்தால் ஏற்பட்டுள்ள நிதிரீதியான இழப்பு சுமார் 656 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையை வங்கி ஏற்கனவே அந்தந்த காலப்பகுதிக்கான தனது நிதி அறிக்கைகளில் முழுமையாக உள்வாங்கியுள்ளதுடன், மேலதிக நிதி இழப்பீடு எதுவும் இனி ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக அதிக பணத்தைப் பெற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து, அந்த இழப்பினை மீட்கும் சட்டப்பூர்வ நடைமுறைகளை வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
மக்கள் வங்கியின் ஒட்டுமொத்த நிதியியல் உறுதிப்பாடு, இலாப மட்டம் அல்லது வாடிக்கையாளர்களின் வைப்புக்களின் பாதுகாப்புக்கு இவ்விடயத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வங்கியின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் எவ்வித தங்குதடையுமின்றி வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
சுமார் 3.8 ட்ரில்லியன் ரூபாய் சொத்துத் தளத்தைக் கொண்டுள்ள மக்கள் வங்கிஇ தனது செயற்பாட்டு ரீதியான நேர்மை மற்றும் வாடிக்கையாளர் சேவையின் அதியுச்ச தராதரங்களைத் தொடர்ந்து பேணும் என அந்த அறிக்கையில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.