களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில், தண்டவாளத்தின் முக்கிய இரும்புப் பாகங்களைக் கழற்றிய பிரதான சந்தேகநபரும், அவற்றை விலைக்கு வாங்கிய பழைய இரும்பு வியாபாரியையும் எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டது.
களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே சனிக்கிழமை (16) அதிகாலை 5.18 மணியளவில் ரயில் ஒன்றின் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே ரயில்களைப் பாதை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ‘மொட்டர் பொய்ன்ட்’ பகுதியின் இரும்புப் பாகங்கள் கழற்றப்பட்டமையே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேலியகொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மங்கள அஜித் தலைமையிலான குழுவினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன் மூலம் வனவாசல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்குக் அடிமையானவர் என விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து தண்டவாளங்களைப் பாதை மாற்றப் பயன்படுத்தப்படும் 3 இரும்பு லீவர்கள் மற்றும் அவற்றை கழற்றப் பயன்படுத்திய உபகரணங்கள் மீட்கப்பட்டன. சந்தேகபரிட் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து கழற்றப்பட்ட ஏனைய இரும்புப் பாகங்களை அப்பகுதியிலுள்ள பழைய இரும்பு வியாபார நிலையமொன்றில் விற்றமை தெரியவந்தது. அதனடிப்படையில், அந்த இரும்புப் பாகங்களை வாங்கிய கடையின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி சந்தேகபர்கள் இருவரும் இன்றையதினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவுப் பிறப்பித்திருந்தார்.