இலங்கையின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுபீட்சம் என்பன இந்தியாவின் பாதுகாப்பு, வளர்ச்சி போன்றவற்றுடன் இணைந்ததாகவே இருக்கிறது. இலங்கை ஒரு நெருக்கடியில் இருந்தால், அது இந்தியாவையும பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கையின் துணைத்தூதுவராகப் பணியாற்றிய கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, இருநாடுகளுக்கும் இடையிலான வீதி இணைப்பு மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நவீனமயப்படுத்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இலஙகையின் துணைத்தூதுவராகப் பணியாற்றி, தற்போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகப் பதவியுயர்வு பெற்றுச்செல்லும் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவின் பிரியாவிடை மற்றும் இராப்போசன விருந்துபசார நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை )15) கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் உரையாற்றிய சத்யஞ்சல் பாண்டே மேலும் கூறியதாவது,
நீண்டகாலமாக நீடித்துவரும் இந்திய – இலங்கை நல்லுறவைப் பொறுத்தமட்டில், கடந்த 3 ஆண்டுகள் மிகச்சிறந்த காலப்பகுதியாக அமைந்திருக்கிறது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் விஜயம், இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பரஸ்பர விஜயங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் இக்காலப்பகுதியில் பதிவாகின. இருநாடுகளுக்கும் இடையிலான இத்தகைய தொடர் அரசியல் ஈடுபாடுகள் இக்காலப்பகுதியிலேயே பதிவாகின.
அதேபோன்று குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளிலும், அதற்கு முன்னரும் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பும் வலுவான நிலையிலேயே இருந்துவந்திருக்கிறது. இலங்கையின் மிகமுக்கிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா விளங்குகிறது. அதுமாத்திரமன்றி இலங்கையில் பெருமளவான முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. அத்தகைய முதலீட்டின் நிர்மாணிக்கப்பட்ட ஐ.ரி.சி நட்சத்திர ஹோட்டல் கடந்த ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
இந்தியாவின் ‘அயலகத்துக்கு முதலிடம்’ கொள்கை வெறும் பெயரளவிலான கொள்கை அல்ல. மாறாக நாம் அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே செய்படுகிறோம். நாம் ஏன் இலங்கைக்கு பல உதவிகளை வழங்கினோம் எனப் பலர் கேட்டார்கள். இலங்கை எமது அயலகம் என்பதே அதற்கான காரணமாகும். ஏனெனில் உங்கள் (இலங்கை) பாதுகாப்பு, வளர்ச்சி என்பது இந்தியாவின் பாதுகாப்பு, வளர்ச்சியுடன் இணைந்ததாகவே இருக்கிறது. நீங்கள் ஒரு நெருக்கடியில் இருந்தால், அது எம்மையும் பாதிக்கும். இந்தியா ஒரு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும்போது நீங்களும் அவ்வாறு தான் உணருவீர்கள். உங்களது அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை உள்ளிட்ட சகல விடயங்களிலும் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம்.
இந்தியா ஏன் குடிநீர் குழாய் திட்டத்துக்குப் பங்களிப்பு செய்தது? ஏனெனில் உங்களது பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை இந்தியா தனதாகக் கருதுகிறது.
மறுபுறம் சக்திவலுத்தளம், இருநாடுகளுக்கும் இடையிலான வீதி இணைப்பு, இருநாடுகளுக்கும் இடையிலான எண்ணெய் குழாய்வழித் திட்டம் என்பன பற்றி ஆராயப்பட்டு வருகிறது. இதுபற்றி விவாதங்கள் இடம்பெறுகின்றன. இவ்விடயத்தில் முனவைக்கப்படும் கரிசனைகளை சீர்செய்யமுடியும். இருப்பினும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் யாதெனில், வீதி இணைப்புத் திட்டத்தை முன்மொழிவதற்கான காரணம் அது இந்தியாவின் முன்னுரிமைக்குரிய விடயம் என்பதனால் அல்ல. மாறாக அது இருநாடுகளுக்கும் நன்மை அளிக்கக்கூடியது என்பதனாலாகும்.
மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான சுமார் 25 ஆண்டுகள் பழமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வது பற்றி இருதரப்பினரும் ஆராயவேண்டும் என்றார்.