அஸர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரும் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘படுவத்தே சாமர’ எனப்படும் மனோஜ் சுரங்க, ஞாயிற்றுக்கிழமை (10) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் சந்தேக நபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் அஸர்பைஜான் புலனாய்வுப் பிரிவு இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம், அந்நாட்டில் தலைமறைவாக இருந்த 48 வயதான மனோஜ் சுரங்க என்ற ‘படுவத்தே சாமர’ கைது செய்யப்பட்டார்.
இவரை அழைத்து வருவதற்காக கடந்த 7ஆம் திகதி அஸர்பைஜான் சென்றிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு, இந்தியா ஊடாக நேற்று முன்தினம் இரவு சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்த போது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ராகம, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், நீண்ட காலம் டுபாயில் மறைந்திருந்துள்ளதுடன், சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரே அஸர்பைஜானுக்குத் தப்பிச் சென்றுள்ளார். மேலும் பாதாள உலகம் குழு தலைவர்களான கணேமுல்ல சஞ்சீவ, கெஹெல்பத்தர பத்ம மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை பட்டு வந்தே சாமர பேணி வந்துள்ளதாகவும் , பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை முன்னின்று நடத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டவரும் விசாரணைகளில், கடந்த 2020 டிசம்பர் 6ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 100 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தலை டுபாயில் இருந்தவாறே சந்தேக நபர் வழிநடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் 2023 டிசம்பர் 31 திகதி அன்று கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப்பொருள் தகராறு காரணமாக நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் 2024 ஜூலை 25 திகதி அன்று அதே பகுதியில் பெண் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை இவரே திட்டமிட்டுள்ளார்.
மேலும், கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக துப்பாக்கிகளை வழங்கியமை, துசித ஹல்லொலுவ மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் 2024 டிசம்பர் 13 திகதி அன்று கந்தானையில் உள்ள பாதாள உலக உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை போன்ற சம்பவங்களிலும் படுவத்தே சாமர தொடர்பு பட்டுள்ளமை விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் பொறுப்பில் உள்ள இவரை, 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்து, அவர் தொடர்புபட்ட ஏனைய குற்றங்கள் மற்றும் பாதாள உலககுழு வலையமைப்புகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.