தோட்டப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் நில உரிமைகள் கோரி இன்று (03) ஞாயிற்றுக்கிழமை அட்டன் நகரில் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தை கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் அட்டனில் “நாம் நீலகாமம்” என எழுச்சி போராட்டம் நடைபெற்றது.
நாம் மலையகம் அமைப்பின் பிரதிநிதிகள், மலையக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் இதன் போது உறுதியாக வலியுறுத்தப்பட்டது.
நீலகாமம் மக்களுக்கு நீதி வேண்டும் எனவும், தோட்டப்பகுதிகளுக்கு கூலிப்படை அவசியம் இல்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும் தோட்டப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்க அனுமதிக்கப்படாது என்றும், தலைமுறை தலைமுறையாக அடிபணிந்து இருந்தாலும் இனியும் அடிப்பணியப் போவதில்லை எனவும் தெரிவித்தனர் மேலும் இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கொழும்புக்கு சென்று போராடுவதற்கும் தயாராக உள்ளோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.







