ஜமைக்கா: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 சர்வதேச போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என சரிவைச் சந்தித்தது. எனினும், துனித் வெல்லாலகே அதிரடியாக விளையாடி 41 ரன்கள் குவித்ததன் மூலம் இலங்கை அணி ஓரளவு மீண்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப் தனது அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணியை நிலைகுலையச் செய்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோசப், ஒட்டுமொத்தமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணி 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
IND A vs SL A: வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் ஏமாற்றம்.. இந்திய ஏ அணி தடுமாற்றம்
170 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டமிழந்ததை அடுத்து, 53 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த ரோவ்மேன் பவல் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பவல் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், ரூதர்ஃபோர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியைத் தாங்கிப் பிடித்தார்.
கடைசி 18 பந்துகளில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 19-வது ஓவரை துஷ்மந்த சமீரா வீசினார். அந்த ஓவரில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் மூன்று பிரம்மாண்டமான சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அந்த ஓவரில் மட்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ரன்களைக் குவித்தது.
இறுதி ஓவரில் வெற்றிக்கு மிகக் குறைந்த ரன்களே தேவைப்பட்ட நிலையில், தசுன் ஷனகா வீசிய 19.4 ஓவரில் ரூதர்ஃபோர்ட் தனது அரைசதத்தை எட்டியதுடன், ஒற்றை ரன் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்த ரூதர்ஃபோர்ட் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
இந்த வெற்றியின் மூலம் சபீனா பார்க் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது அதிகபட்ச ரன் சேஸிங் சாதனையைப் பதிவு செய்துள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த அணி கைப்பற்றும் முதல் இருதரப்பு டி20 தொடர் இதுவாகும். பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய சமர் ஜோசப் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் தட்டிச் சென்றார்.
IND vs AFG: இந்திய அணியில் இந்த 2 வீரர்களை ஏன் அலட்சியப்படுத்துறீங்க? ஸ்ரீகாந்த் கருத்து
முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வென்றிருந்த நிலையில், தற்போது டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 25, வியாழக்கிழமை ஆன்டிகுவாவில் தொடங்க உள்ளது.