லண்டன்: இந்திய கிரிக்கெட்டின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட வரவேற்பு, ஜாஸ் பட்லரால் சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப கால புகழுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாக விளையாடி அசத்திய வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூன் 26 அன்று தொடங்கவுள்ள அயர்லாந்து தொடரில் அவர் களமிறங்கும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிய மிகக் குறைந்த வயது வீரர் என்ற புதிய சாதனையைப் படைப்பார்.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சூர்யவன்ஷியுடன் இணைந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர், ஸ்டூவர்ட் பிராடுடன் இணைந்து நடத்தும் யூடியூப் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் சூர்யவன்ஷி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பட்லர் மற்றும் குஜராத் அணியின் உதவி பயிற்சியாளர் ஆசிஷ் கபூர் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த உரையாடலில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவருக்குமான ஆரம்பகால புகழின் ஒப்பீடு குறித்து விவாதிக்கப்பட்டது. சச்சின் தனது 16வது வயதில் 1989ல் பாகிஸ்தான் தொடரில் அறிமுகமானார்.
இது குறித்து பட்லர் கூறுகையில், "ஆசிஷ் கபூரிடம் சச்சின் அறிமுகமான போது இருந்த சூழ்நிலை குறித்துக் கேட்டேன். சச்சின் அறிமுகமான போது, அவரைப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் செய்தித்தாள்களில் மட்டுமே வரும். மக்கள் அவரைப் பற்றி படித்து மட்டுமே தெரிந்து கொண்டனர்.
மைதானத்திற்கு நேரில் சென்றவர்கள் அல்லது தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்தவர்கள் மட்டுமே சச்சினின் ஆட்டத்தைக் கண்டனர். அப்போது சமூக ஊடகங்களோ, ஹைலைட்ஸ் வீடியோக்களோ கிடையாது. சச்சின் ஒரு அசாதாரண திறமைசாலி என்ற பேச்சு மட்டுமே மக்களிடையே பரவலாக இருந்தது."
"ஆனால், வைபவ் சூர்யவன்ஷியின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை என்றாலும், சமூக ஊடகங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அவரது ஆட்டத்தைப் பார்த்து ரசித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் மிக மதிப்புமிக்க வீரராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 700 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். அதனால் தான் வைபவ்வின் புகழ் சச்சினின் ஆரம்ப காலத்தை விட மிக வேகமாக பரவியுள்ளது. அவர் இந்திய அணிக்கு முற்றிலும் தகுதியானவர்" என்றார்.
‘அம்லா’வுக்கு அடுத்து சுப்மன் கில்.. பிரம்மாண்ட உலக சாதனை படைக்கக் காத்திருக்கும் இந்திய கேப்டன்
தற்போது இலங்கை மண்ணில் இந்திய 'ஏ' அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்.