ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தனது வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரைப் பாதித்து வந்த காயத்திலிருந்து மீள அவர் மேற்கொண்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், தற்போது பிசிசிஐ-யின் கண்காணிப்பில் உள்ளார். அவர் மீண்டும் களத்திற்குத் திரும்புவது, மருத்துவக் குழுவின் அனுமதிக்குப் பிறகே உறுதி செய்யப்படும்.
24 வயதான இந்த பேட்ஸ்மேன், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தோள்பட்டை வலியுடன் போராடி வந்தார். வலியையும் மீறி பல போட்டிகளில் விளையாடி வந்த அவருக்கு, கடந்த இரண்டு சீசன்களில் இது பெரும் சவாலாக அமைந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

"என்னிடம் பலர் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகள் நான் நினைத்துக்கூட பார்க்காத சோதனைகளை அளித்தன. சில நாட்கள் சிறப்பாகவும், சில நாட்கள் மிகவும் கஷ்டமாகவும் இருந்தன. ஒரு போட்டியை விளையாடி முடிப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இப்போது காயத்திலிருந்து மீண்டு வரும் பணியை தொடங்கிவிட்டேன். விரைவில் மீண்டும் என் அன்பிற்குரிய விளையாட்டிற்குத் திரும்புவேன்," என ரியான் பராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை, பராக் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கும்போது நடந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐபிஎல் 2026-ன் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று தனது சிறப்பான தலைமையால் முத்திரை பதித்தார். குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி, ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பராகின் இந்த உடல்நலப் பாதிப்பு, அவரது சர்வதேச கிரிக்கெட் வாய்ப்புகளையும் பாதித்துள்ளது. இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிரான முக்கோணத் தொடருக்கான இந்தியா ஏ அணியின் துணை கேப்டனாக முதலில் அவர் நியமிக்கப்பட்டிருந்தது, ஆனால் காயம் காரணமாக அவர் அந்தத் தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டார்.
FIFA உலககோப்பை கால்பந்து வெல்ல கிறிஸ்டியானோ ரொனால்டோ-க்கு கடைசி வாய்ப்பு.. 41 வயதில் சாதிப்பாரா?
கடந்த ஐபிஎல் சீசனின் பிற்பகுதியில் ஹாம்ஸ்ட்ரிங் காயத்தாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியைத் தவிர்த்துவிட்டு, முக்கியமான பிளே-ஆஃப் போட்டிகளில் அவர் பங்கேற்றார். தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் உயர்மட்ட மையத்தில் (Centre of Excellence) அவரது மறுவாழ்வுப் பணிகள் கண்காணிக்கப்படும் என்றும், முழுமையான மருத்துவ அனுமதிக்குப் பிறகே அவர் போட்டிகளில் மீண்டும் விளையாடுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.