ராய்ப்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்று முதலில் பந்துவீசினால் கொல்கத்தா அணியை எளிதாக சுருட்டிவிடலாம் என கணக்கு போட்ட பெங்களூரு அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. கொல்கத்தா அணியின் அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 192 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
மழையால் சற்று தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் பின் ஆலன் களமிறங்கினர். 8 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர் என 18 ரன்கள் எடுத்து மிரட்டிய பின் ஆலனை புவனேஸ்வர் குமார் வெளியேற்றினார். சிறிது நேரத்திலேயே ரஹானே 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் பவர் பிளே ஓவர்களில் 48 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி சற்று தடுமாறியது.
