மும்பை: அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கடந்த 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது 16-வது வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணியில் இடம் பிடித்த மிக இளம் வீரர் என்ற அவரது சாதனை கடந்த 36 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் 15 வயதே ஆன பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, சச்சினின் சாதனையைத் தகர்த்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இடதுகை பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி, 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார். மேலும், ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயிலின் நீண்ட கால சாதனையை முறியடித்தார். இந்த சீசனில் அவர் ஆரஞ்சு தொப்பி, சூப்பர் ஸ்டிரைக்கர் மற்றும் தொடரின் மதிப்புமிக்க வீரர் (எம்விபி) உட்பட மொத்தம் 5 விருதுகளை வென்று அசத்தினார்.
இந்த சீசனுக்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறன் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பினர். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் காகிசோ ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து அவர் பதிலடி கொடுத்தார். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்ததுடன், பிளே-ஆஃப் போட்டிகளில் இரண்டு முறை உட்பட மொத்தம் மூன்று முறை 90 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் 175 ரன்கள் குவித்திருந்தார்.
IND vs AFG: 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி எடுத்த முடிவு.. அஸ்வின், ஜடேஜாவில் ஒருவர் கூட இல்லை!
வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், "அவரது அபார ஆட்டத்திறனை எங்களால் புறக்கணிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய அழுத்தங்கள் நிறைந்த போட்டிகளில் ஒரு 15 வயது சிறுவன் காட்டியுள்ள முதிர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் ஒரு ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர். அவர் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது," என்றார். அயர்லாந்து தொடருக்கு முன்னதாக வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஏ அணியில் விளையாட உள்ளார்.
இந்திய டி20 அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை தூக்கி எறிந்த பிசிசிஐ.. மூன்று அணிகளிலும் இல்லை