லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் அறிமுக வீரராக களம் இறங்கினார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 224 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 79 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 110 பந்துகளில் 154 ரன்கள் குவித்து அசத்தினார்.

இவர்களின் அதிரடி சதங்களின் உதவியுடன் இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 403 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மத் ஷா மட்டுமே பொறுப்புடன் விளையாடி 77 ரன்கள் எடுத்தார். இறுதி கட்டத்தில் அறிமுக வீரர் பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தில் ரஹ்மத் ஷா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக தர்விஷ் ரசூலி காயம் காரணமாக ஆட்டமிழக்காமல் வெளியேறினார் (Retired Hurt).
IND vs AFG: சுப்மன் கில் 9வது சதம் விளாசி அபாரம்.. அதிவேக சதம் விளாசிய 4வது இந்திய கேப்டன் என பெருமை
இந்திய அணி தரப்பில் குர்னூர் பிரார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக குர்னூர் பிரார், ஆப்கானிஸ்தான் அணியின் முகமது சலீமை கிளீன் போல்டு செய்து தனது மூன்றாவது விக்கெட்டைப் பதிவு செய்தார். அர்ஷ்தீப் சிங் 9 ஓவர்களில் 45 ரன்கள் வழங்கி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.