மும்பை: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக உடற்தகுதியை நிரூபிப்பதற்காக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்திற்கு வருமாறு ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா அங்கு வந்துள்ள நிலையில், ரோஹித் சர்மா குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஜூன் 6 முதல் ஒரு டெஸ்ட் போட்டியும், ஜூன் 13 முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், இவர்களின் பங்கேற்பு உடற்தகுதி சான்றிதழைப் பொறுத்தே அமையும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில், ஹர்திக் பாண்டியா பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்திற்கு வந்துள்ளார். அவர் அங்கு ஒரு வாரம் தங்கி உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட உள்ளார். ஆனால் ரோஹித் சர்மா இன்னும் அங்கு வந்து சேரவில்லை எனத் தெரிகிறது. இந்த ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அவர் பிசிசிஐ விதிகளை மதிக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தற்போது இந்திய ஒருநாள் அணியில் மட்டுமே இடம் பிடித்து ஆடி வருகிறார்.
இதற்கிடையில், ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பந்துவீச ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தார் உட்பட 7 வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ரஞ்சி கோப்பையில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த ஆகிப் நபி தார், இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படாதது கடும் விமர்சனங்களை எழுப்பியது.
முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அணியில் இடம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தற்போது ஆகிப் நபி தார் மாற்று வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வலைப்பயிற்சியில் பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார்.
கடுமையான வெயில் காரணமாகவும், ஐபிஎல் இறுதிப்போட்டி வரை விளையாடியதாலும் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் வலைப்பயிற்சியில் முழுமையாகப் பந்துவீச முடியாது என்பதால், பேட்ஸ்மேன்களின் பயிற்சிக்கு உதவும் வகையில் இந்த 7 வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
விராட் கோலியை அவமரியாதையாக பேசினாரா வைபவ் சூர்யவன்ஷி? பரவிய வீடியோ.. ஹர்ஷா போக்ளே விளக்கம்
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லெக்-ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரியும் அழைக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சுப்மன் கில், சாய் சுதர்சன் உள்ளிட்ட 7 வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதால், முதல் நாள் பயிற்சியில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.