டம்புல்லா: இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் மூன்றாவது போட்டியில், இந்திய ஏ அணி களம் இறங்கியபோது அனைவரின் பார்வையும் வைபவ் சூர்யவன்ஷி மீதே இருந்தது. ஆனால், இந்த 15 வயது இளம் வீரர் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினாலும், அதை ஒரு பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார். இந்திய ஏ அணியும் தடுமாறி வருகிறது.
முதல் ஓவரில் நிதானமாகத் விளையாடிய சூர்யவன்ஷி, அதன் பின்னர் சாமிக்க குணசேகர வீசிய ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினார். அந்த ஓவரில் லெக் சைடில் ஒரு பவுண்டரி, நேராக ஒரு சிக்ஸர் மற்றும் டீப் மிட்-விக்கெட்டில் ஒரு பவுண்டரி என அவர் ரன்களைக் குவித்தார்.

அவர் தனது ஆட்டத்தின் வேகத்தை இன்னும் அதிகரிக்கத் திட்டமிட்ட நேரத்தில், தவறான டைமிங் காரணமாக அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது. சஹான் அரச்சிகே வீசிய பந்தை லோஃப்டட் கவர் டிரைவ் செய்ய முயன்ற சூர்யவன்ஷி, பாயிண்ட் திசையில் நின்றிருந்த வனுஜ சஹானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
IND Vs AFG: 148 கிமீ வேகம், 6.5 அடி உயரம்: குர்னூர் பிரார் அசாத்திய திறமையை பாராட்டிய வசீம் ஜாபர்!
தற்போது நடைபெற்று வரும் முத்தரப்புத் தொடரில் சூர்யவன்ஷி இன்னும் தனது முழுமையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரது பயமற்ற பேட்டிங் முறை அனைவரையும் கவர்ந்தாலும், இதுவரை அவர் எடுத்துள்ள 14, 44 மற்றும் 21 ஆகிய ரன்கள் அவரது விளையாட்டில் உள்ள ஒரு முக்கிய பலவீனத்தைக் காட்டுகின்றன. அதாவது, 50 ஓவர் போட்டியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தாலும், அதை அவரால் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை.
கடந்த ஜூன் 9, 2026 அன்று இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணியில் அறிமுகமான சூர்யவன்ஷி, முகமது ஷிராஸ் மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரின் ஓவர்களில் மூன்று பவுண்டரிகளை விளாசி அதிரடியாகத் தொடங்கினார். இருப்பினும், வெறும் 12 பந்துகளே நீடித்த அவரது இன்னிங்ஸ் விரைவாக முடிவுக்கு வந்தது. இன்ஃபீல்டை கடக்க முயன்றபோது பந்தை சரியாக தூக்கி அடிக்காததால், இலங்கை ஏ அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே டைவ் செய்து மிகச் சிறந்த கேட்ச் ஒன்றை எடுத்தார்.
IND Vs AFG: அம்மா தான் எல்லாம்.. செய்தியாளர் சந்திப்பை தாய் போனுக்காக நிறுத்திய நிதிஷ் குமார் ரெட்டி
தொடர்ந்து ஜூன் 11 அன்று ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், சூர்யவன்ஷி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், 9 பவுண்டரிகளை விளாசி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்துல்லா அகமத்சாய் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் இஷாக் ரஹீமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை ஆடுகளம், அவருக்கு கடும் சோதனையாக அமைந்திருப்பதாகவும், அதனை அவர் விரைவில் சமாளித்து ரன் சேர்ப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.