வெளிநாட்டு சிகரெட்டுகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கடத்தி வந்த இலங்கை பயணி ஒருவர் இன்று புதன்கிழமை (13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு, தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஆவார்.
இவர் இன்று அதிகாலை 02:50 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து ‘ஏர் அரேபியா’ நிறுவனத்திற்கு சொந்தமான G9-587 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேகநபர் கொண்டு வந்த மூன்று பயணப் பொதிகளையும் சோதனை செய்த போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த “மான்செஸ்டர்” மற்றும் “பிளாட்டினம்” ரகத்தைச் சேர்ந்த 32,000 சிகரெட்டுகள் அடங்கிய 160 சிகரெட் கார்ட்டூன்கள் மீட்கப்பட்டன.
இதன் சந்தை பெறுமதி சுமார் 48 இலட்சம் ரூபாய் என கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.