சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய புஸ்ஸி ஆனந்த், நம் கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் பிறந்தநாள் வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
தவெக ஆட்சி அமைந்து, முதல்வர் ஆகி முதல் பிறந்தநாள். அதனால், இதுவரை இல்லாத அளவிற்கு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுங்கள். முதலமைச்சர் எந்த விதத்திலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் த.வெ.க.வினர் செயல்பட கூடாது என உத்தரவிட்டு உள்ளார்.
அந்த வகையில் பிறந்தநாளையொட்டி பேனர்கள், கட்-அவுட் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ரீல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் அட்ராசிட்டியில் தவெகவினர் ஈடுபடக்கூடாது. இதற்கு எல்லாம் முதலில் சரி என்று சொல்கிறீர்கள். விழாவுக்கு நாங்கள் வரும்போது பேனர்கள் உள்ளது. இது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டால் தொண்டர்கள் வைத்து விட்டார்கள் என கூறுகிறீர்கள். எனவே இனி த.வெ.க. சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளிலும் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
முதலமைச்சர் விஜய் உத்தரவுக்கிணங்க பேனர் கலாச்சாரம் என்பது த.வெ.க.வில் இருக்கக்கூடாது. அப்படியும் மீறி வைத்தால் அதுகுறித்து விசாரித்து நிர்வாகி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல திமுக, அதிமுக என பலகட்சியில் இருந்தும் தவெகவில் வந்து இணைக்கிறார்கள். அவர்களுக்கு கட்சி பதவி கொடுத்து கெளரவிக்க வேண்டியது நமது கடமை.
இதனால் தவெக தற்போதைய நிர்வாகிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரம் செயல்படாத நிர்வாகிகள், கோஷ்டி மோதலில் ஈடுபடுபவர்களுக்கு தானஅ பாதிப்பு ஏற்படும். அதே போன்று மாற்றுக்கட்சியினருக்கு கட்சி பதவி கொடுக்கும் போது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை ஆலோசித்து தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு அவர் பேசியதாக தெரிகிறது.