தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசமாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் ஆகியோர் மீது சென்னை காவல்துறை தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அவர்கள் இருவரின் சிறைக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான அலிசா அப்துல்லா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் ஆகியோர் தன்னை பற்றி சமூக ஊடகங்களில் மிகவும் அவதூறாகவும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.
அலிசா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சென்னை காவல்துறை, தீவிர விசாரணைக்கு பிறகு திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகிய இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, சிறையில் இருக்கும் திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.