கட்டாயமான இலங்கை தரக்கட்டளைச் சான்றிதழ் (SLS) இன்றி, தரமற்ற இரும்பு கம்பிகளை உற்பத்தி செய்த ஹோமாகம தொழில்துறையிலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அதிகாரசபையின் அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை (09) குறித்த தொழிற்சாலையில் திடீர் சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலை சுமார் மூன்று வருடங்களாக இயங்கி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு ஏனைய தயாரிப்புகளுடன் சேர்த்து, 6 மில்லிமீற்றர் அளவிலான தரமற்ற இரும்பு கம்பிகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் உரிய அங்கீகாரம் இன்றி இரும்பு கம்பிகளை உற்பத்தி செய்த குற்றத்திற்காக தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், SLS இலச்சினை இன்றி தரமற்ற இரும்பு கம்பிகளைத் தயாரித்தமைக்காக குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.